சனி, அக்டோபர் 13, 2012

என் மாமி !

என் அருமை மாமிக்கு
என்ன என்ன செய்தாலும்
என்னையே பலி தீர்க்கும்
எண்ணத்தை யாது சொல்வேன் !

வகை வகையாய் கறி சமைத்து
மனம் மணக்க வைத்தாலும்
தொகை தொகையாய் குறை கூறும்
பாங்குள்ள மாமி இவள் !

சாப்பாட்டில் உப்பு இல்லை
சப்பென்று இருக்குதென்று
போடுகின்ற கூச்சலிலே
பக்கத்துக்கு வீடதிரும் !

சேலை எந்தன் கலைந்தாலும்
வேலையின்றி இருந்தாலும்
காளை அதன் திமிர் போல
சோலையம்மாள் பொங்கிடுவாள்!

திண்ணையிலே நானிருந்து
கண்ணைக் கொஞ்சம் அயர்ந்தாலும்
பண்ணையார் மகளோ என்று
பல நூறு கதைகள் சொல்வாள் !

காலையிலே போனவரு
மாலையிலே வருவாரே
வாசலிலே நின்றவரை
வழி நோக்கிப் பார்த்தாலும்
மோப்ப நாய் முகர்வது போல்
முகர்ந்து பின்னே வந்திடுவாள் !

அந்தி சாயும் நேரத்தில்
அவரருகே நானிருந்தால்
சிந்தனையே இல்லாமல்
பத்திரக் காலியாவள்!

காலையிலே குளித்து விட்டு
கல கலப்பாய் நான் வந்தால்
மலை முறிந்து போனதுபோல்
தலையினிலே அடித்துக்கொள்வாள் !

நான் மறு பிள்ளை பெற்றெடுக்க
மறுக்கின்ற என் மாமி
கருவுற்று நான் இருந்தால்
கஷ்டமடி எனக்கு என்பாள் !

இரண்டோடு போதுமென்று
இறுமாப்பாய் இழுபடுவாள்
முரண்பாடு கொள்வதிலே
முற்போக்குக் காரியவள் !

வயதாகிப் போச்சுதென்று
வழி விட்டுப் போனாலும்
தலை மேலே ஏறி நின்று
கரகாட்டம் ஆடுகிறாள் !

சித்தமே பிடித்து விடும்
போல் இருக்கு ஆண்டவனே
இருவரிலே ஒரு உயிரை
சீக்கிரமே எடுத்து விடு !!!!!

வியாழன், ஜூன் 21, 2012

தீயதை தீண்டாதே

கொற்றவனின் துணையின்றி கொள்ளா வாழ்வு
மற்றவனின் மருவலிலே சுகமாய்  ஆகா
சிற்றின்பப் பெண்டிர்தம் பொல்லா நோக்கு
சீவியத்தை சீரழிக்கும் தீதே தீதே !!

கட்டுக்கும் அடங்காத ஆவல் கொண்டு
சருகுவதால் தீதுனக்கு அறிந்து விடு
கூட்டுக்குள் அடங்குமுந்தன் மானமின்று
நாட்டுக்குள் பரவுவது சுலபம் அன்றோ !!

மனை மணக்க வந்தவளே என்பதனால்
மனையாளே என்றுனக்கு பெயரும் உண்டு
வினையாக இல்லாமல் நிந்தன் வாழ்வு
துணையோடு வாழ்வாங்கு வாழ்ந்தால் போதும் !!

மறுதளித்த வாழ்வெமக்கு வேண்டாம் கண்ணே
ஒருதலையாய் ஒன்றிணைந்து வாழ்ந்தால் வெற்றி
தறுதலையாய் வாழ்ந்துனது வாழ்வினையே
தறிகெட்டு வாழ்வதிலே சுகமே இல்லை !!!