சனி, பிப்ரவரி 25, 2017

நேரிசை வெண்பா ..

காணக் கதைபேசுங் காந்தவிழிக் கண்ணிரண்டும்
ஆனவரை பேசுதடி அச்சமின்றி - நாணத்தில்
நாளும்நீ நில்லாது நான்படும் பாட்டைவந்து
பாழுமென் நெஞ்சினிலே பார் !

எண்சீர் விருத்தம் ...



நற்சீராய் நீரோடி வயல்விளையக் கண்டேன்
... நாற்றெல்லாம் தலைநிமிர்த்தி சிரிப்பதையும் கண்டேன்
முற்றியநெற் கதிரறுக்கும் கிளிகளையும் கண்டேன்
... முழுநிலவின் ஒளியினிலே சிதறியநெல் கண்டேன்
உற்சாகம் இழந்தோராய் உலகினரைக் கண்டேன்
... ஊஞ்சல்கட்டி ஆடுகின்ற இனவாதம் கண்டேன்
குற்றமிழைத் தோரெல்லாம் தப்புவதைக் கண்டேன்
... கொள்கையிலே நிற்பவர்கள் குமுறுவதைக் கண்டேன் !


தற்பெருமை கொண்டவரைத் தரணியிலே கண்டேன்
... தலைவிரித்து ஆடுகின்ற பொல்லாங்கைக் கண்டேன்
கற்பனையில் வாடுகின்ற குமரிகளைக் கண்டேன்
... கண்ணீரில் ஏழையவர் இன்னலினைக் கண்டேன்
மாற்றார்தம் மனைவியரில் வீழ்ந்தவனைக் கண்டேன்
... மனையினிலே கிடப்பவளை மறந்தவனைக் கண்டேன்
ஆற்றாத துயரத்தில் வாழ்பவரைக் கண்டேன்
... அவரவரின் கண்ணீரில் ஆயிரத்தைக் கண்டேன் !

புதுக் கவிதை ....





கள்ள முள்ள மனதினில்
உள்ள தெல்லாம் கருப்புதான்
நல்ல உள்ள முள்ளவர்
இல்லை யிங்கு உண்மைதான்

அள்ளு கின்ற நிலைவரின்
உள்ள தெல்லா மள்ளுவார்
சொல்லு கின்ற வார்த்தையில்
சொல்லி ழுக்குச் சுமத்துவார்

வெள்ளை யுள்ள முள்ளவர்
உள்ள தெனில் எம்மிலே
கல்லில் வெட்டி அவர்பெயர்
எல்லைக் கல்லாய் நாட்டுவோம் !

புதுக் கவிதை ..



ஒரு
குழந்தையைப் போலக்
கொஞ்சியபடியே பேசுகிறாய்
நகத்தைக்
கடித்தபடியே சிரிக்கிறாய்

இமைகள் சுழற்றி
கதை சொல்கிறாய்
இல்லையென்று இல்லை
எல்லாமே அழகுதான்

உன்
தோள் தொட்டுப்
பேசும்போது மட்டும்
சரிந்து விழாத
முந்தானையை
சரிசெய்து கொள்வாயே
மிஞ்சிவிடுகிறது !

வாழ்வில் ...



அன்புள்ளங் கொண்டோரே மக்கள் - நட்
பண்பில்லா தோரெல்லாம் மாக்கள்
அன்னத்தின் இடையூறே விக்கல் - அதன்
ஆதிக்கம் நிறைந்தாலே சிக்கல்

கன்னத்தின் அடையாளம் முத்தம் - அதைக்
கடைந்தாலே தினமேறும் பித்தம்
எண்ணத்தின் ஏக்கம்தான் காதல் - அது
ஏற்காத நிலையேதான் சாதல்

வண்ணத்தின் சேர்க்கைதான் காட்சி - பெரும்
வம்புகளின் கூட்டுறவே சூழ்ச்சி
பிண்டங்கள் இணைவதுவே புணர்ச்சி - மனம்
பிணைந்தின்பம் காண்பதுவே மகிழ்ச்சி

மேகத்தின் சேர்க்கைதான் மின்னல் - தேகம்
மோகத்தில் வீழ்ந்தாலே இன்னல்
போகத்தின் துள்ளல்தான் துன்பம் - வெற்றிப்
பெருக்கத்தின் உணர்வேதான் இன்பம் !

மனைவியைக் கொஞ்சம் பாருங்கடா !



மனையினைக் காத்திடும் மனைவியவள் - நல்
மாண்பினைத் தினமும் போற்றுங்கடா !
மனையினில் தீபச் சுடரொளியாய் - புது
மங்கலம் நிறைவதைப் பாருங்கடா !

துணையெனக் கண்டவள் துன்பமெலாம் - உன்
தோளினில் கிடப்பவள் காட்சியடா
அணைத்திட மட்டுமா அவளுனக்கு - இல்லை
அனைத்திலும் உனக்கே சொந்தமடா !

தன்னையே தந்தவள் தரணியிலே - தரம்
தாழ்ந்திட வாய்ப்பே இல்லையடா
பண்புடன் வாழ்பவள் நெஞ்சினிலே - புதுப்
பொலிவுடன் கிடந்தே வாழுங்கடா !

தன்னிக ரற்ற அன்பிலவள் - தினம்
தளும்பிடும் குமுறலைக் கேளுங்கடா
இன்முகத் தாலவள் கைகோர்த்து - என்றும்
இன்பக் கடலில் மூழ்குங்கடா !

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காவடிச் சிந்து ( 3 )



சின்னக்கு ழந்தைநீ தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
சிதைப்பாரடி வதைப்பாரடி
இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !

கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
கனவோபல நனவாகுது
கனியேயிது கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந் தொல்லையே !

கடலன்னை ....



அலையெனப் பொங்கும் ஆழிதரும்
அற்புதம் நமக்குப் பலவாகும்
விலையெனப் போகும் நல்முத்தும்
விளைப்பவள் நமது கடலன்னை
தலைவிரித் தாடிடும் தருணத்தில்
தடல்புடல் என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந் தவளே நின்றாலும்
நிம்மதி தரைக்கும் அவளன்றோ !


பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
தலைகவி ழாதவள் கடலன்னை
இகத்தினி லலையும் பூங்காற்றும்
இதமா யவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே யில்லாத் தேகசுகம்
நித்தம் தருபவள் கடலன்னை !


அறுசுவை யுணவுக் குயிராகும்
ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் அமைதியில் வழிந்தோடி
ஆறுத லடைவதும் இவள்மடியே
நிறைந்தவள் இகத்தினில் முப்பங்கு
நிலத்திடை அளவோ ஒருபங்கு
வரையறை யில்லா வளங்கொண்டே
வாழ்பவள் நமக்குள் கடலன்னை !

காவடிச் சிந்து ( 2 )





கூடிநீ வாழ்ந்திடு கண்ணே - உயிர்
கூடுக ளைந்திடு முன்னே - என்றும்
குடியாதிரு குலையாதிரு
வடிவாயொரு விடிவேவரக்
கொழிக்கும் - வாழ்வு - செழிக்கும் !

கொள்கைக ளோடேநீ நின்று - கொண்ட
கொள்கைதான் வாழ்வென்ற னென்று - நீ
குறியாயிரு குனியாதிரு
வறியோனென வளையாதிரு
குளிர்வாய் - வாழ்வில் - மிளிர்வாய்!

காவடிச் சிந்து ( பா .. 1 )



அஞ்சனங்கள் சூழ்ந்தவிழி யோடு - ஒரு
ஆரணங்கைக் கண்டதனால் பாடு - தினம்
அன்னநடைப் போட்டுவரும்
சின்னயிடைக் காணமனம்
ஆறும் - அதன்வா - யூறும் !

கொத்துமலர்க் கூந்தலிலே சூடி - ஒரு
கோலமயில் போல்வருவா ளாடி - தினம்
கொஞ்சுமொழிப் பேசுமிதழ்
மிஞ்சிவிடும் பேரழகைக்
கூட்டி - ஆவல் - ஊட்டி !

சின்னவிழிப் பார்வையினால் சீண்டி - பலர்
சிந்தையையும் நாள்முழுதுந் தீண்டி - அவள்
செவ்வழகைக் காண்பவரில்
எவ்வயதும் தான்பதறச்
செய்யும் - அதுவே - மெய்யும் !

காதில் வந்து பாடு ...



மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா !

இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா !

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா !

இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா- உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா !

காவடிச் சிந்து ..



ஊமையராய் வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம் - ஏழ்மைக் - கோலம் !

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரிணைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் !

மண்ணைக் காப்போம் ..



தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
தளிர்க்கின்ற ஈனத்தைக் களை எடுப்போம்
வானத்தை வரச்சொல்லி மண்ணைக்காக்க – எங்கும்
வளர்கின்ற மரங்கட்கு காவல் நிற்போம்


கானகத்தை கையோடு இணைத்தபடி - வரும்
கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
ஊரூராய் சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
பொன்வளத்தை பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம் - அவர்
மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்



என்னிருகண் மணியிந்த நாடுஎன்று - இங்கு
எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
தொன்றுதொட்டு வாழ்வதென உரக்கச் சொல்வோம் !

இன்னிசை வெண்பா ..

மையிருட்டி லும்உன்றன் மாயவிழி பேசுவதைக்
கையடங்கி நீகிடக்கக் காண்பேனே மெய்யுருகி
ஐயமின்றி என்நெஞ்சில் ஆள்கையிலும் நானறிவேன்
தையலுன்றன் கண்ணின்சா டை !

வியாழன், பிப்ரவரி 16, 2017

வளையற் சிந்து ...


கல்வியதைக் கற்றிடுவாய்
கசடறவே நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால் சூழும் - நல்ல
காலமுன்னில் கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !

கல்வியுனக் களித்தவரைக்
காலமெலாம் போற்று - அவர்
காலடியில் ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த கூற்று !

சிந்து ( இலாவணி )



நெம்பதுபோல் நாள்முழுதும்
நேரடியா யுன்னினைவே
நெஞ்சினிலே குத்துதடிப்
பெண்ணே ! பெண்ணே !

செம்பவள வாய்திறந்து
சேதியொன்னு சொல்லுவந்து
சேர்ந்திருப்போ மிக்கணமே
கண்ணே ! கண்ணே !

கண்குளிரக் காட்சிகளே
கண்ணேவுன் கண்களிலே
காணநிதம் கண்ணெதிரே
வாடீ ! வாடீ !

பெண்ணழகுப் பூத்திருக்கும்
பொய்கையடி உன்னழகில்
பேரின்பம் கொள்ளவுனைத்
தாடீ ! தாடீ !

என்னிருகண் னின்மணிபோல்
என்றுமுனைக் காத்திடுவேன்
ஏறெடுத்துப் பாரடிநீ
என்னை ! என்னை !

அன்னமதைப் போல்நடந்து
ஆடிவந்தால் வாசலுக்கு
ஆவலுடன் ஏந்திடுவேன்
உன்னை ! உன்னை !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

கொட்டுகின்ற வெய்யிலிலே கொப்புளங்கள் ஏராளம்
சொட்டு மழையில்லாத் தொல்லையிது - வெட்டவெளிப்
பொட்டல்போ லில்லம் ; புழுக்கமாம் பாய்விரிக்க
எட்டாத்தூ ரத்தில் இவள் !

நெல்மணிகள் ...



காலையிளங் கதிரொளியில்
குளித்திருக்கும் புல்லும் - அந்த
கருக்களிலும் கண்திறக்கும்
கதிர்நிறைந்த நெல்லும் !

வாலையிளங் குமரிகளாய்
வயல்பரப்பில் எங்கும் - வடி
வழகுகாட்டி நெல்மணிகள்
வனப்பெடுத்துப் பொங்கும் !

சோலைக்கிளிக் கூட்டங்களோ
சுதிதொடுத்துப் பாடும் - அந்த
சுகத்தினிலே நெல்மணிகள்
சதிமறந்து ஆடும் !

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

உன்னோடு நான் ...

வான்மேகக் கூட்டத்தில்
வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
முகம்மூட வேண்டும் - இந்த
வின்பூக்கள் ஒவ்வொன்றும்
உனைப்பார்க்க வேண்டும் - இங்கே
மண்வாழும் மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

உலக முன்னை வெறுக்கும் ...



நேசமில் லாமல் இருந்திடலாம்
.. நெருக்கடி யின்றியும் இருந்திடலாம்
வேசமிட் டெவனும் இருந்துவிட்டால்
.. வெறுத்தே உலகம் உமிழ்ந்துவிடும் !


அணிகல னின்றி இருந்திடலாம்
.. அவதியி லாமலும் இருந்திடலாம்
துணிவில் லாமல் இருந்துவிட்டால்
.. துன்பம் உன்னைத் துரத்திவரும் !


கலகம் தவிர்த்தும் இருந்திடலாம்
.. களவில் லாமலும் இருந்திடலாம்
கலக்கம் கொண்டே இருந்துவிட்டால்
.. காலம் உன்னைக் கவிழ்த்துவிடும் !


அலைச்ச லிலாமல் இருந்திடலாம்
.. அலுப்பில் லாமலும் இருந்திடலாம்
உழைப்பில் லாமல் இருந்துவிட்டால்
.. உலகம் உன்னைக் கேலிசெயும் !

ஊற்றாக நானுக்கு ..



ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
... அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
... காதில் வந்து சொல்லிடுவேன் !

ஊற்றாக நானிருக்க - ஒளி
... விளக்காக நீ இருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
... இருந்தால்தான் நமக்கு என்ன !

தேற்றாத இதயங்களே - தினம்
... தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
... வாய்மொழியே பலம் எனக்கு !

ஒயிற் கும்மி ...

கட்டுக்க டங்காத காதலி னாலிளங்
கன்னியர் போக்கினைப் பாருங்க டி
கனவேயிது கறையேதரு (ம்)
நிலையாதது தினமேயினி
கட்டுடன் வாழ்ந்திங்கு மாளுங்க டி!

இருவிகட்ப நேரிசை வெண்பா ..

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே - நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டிணைப் போல் !

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

ஹைக்கூ ....

ஊற்றெடுத்தது
உனக்கும் எனக்கும்
கசிந்தது ஊருக்குள் ...!

எண்சீர் விருத்தம் ..



காய் - காய் - மா - தேமா



விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச் செய்ய
... விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டும் காலைக்
... கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
... மான்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா இயற்கைஎழில் இருந்தும் மென்ன
... எத்திசைக்கும் திங்களொளி தானே வேண்டும் !


ஒளியளித்த களைப்பினிலே கதிரோன் மெல்ல
... ஒலிகடலில் கால்நனைத்து நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள் வானில்
... கார்இருளைக் கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
... கீச்சிட்டே தானடையும் தத்தம் கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
... குமரியவள் முகம்பார்த்தே மேகம் ஓடும் !

கும்மிச் சிந்து ..



செக்கச்சி வந்தவள் செங்கனி வாயிதழ்
செந்தளிர்ப் போடுதான் வந்துநின் றாள்
வெக்கத்தி லென்முன்னே வேல்விழி யாலவள்
வெட்டியே யேதேதோ சொல்லநின் றாள் !


பக்கத்தில் நின்றவள் பார்வையின் வீச்சினில்
பாதிவு யிர்கையில் வந்தது போல்
சொக்கினே னென்னிலே ! சுந்தர முள்ளதா ?
சொல்லுங்கள் தோழரே உள்ளது போல் !

குறும்பா ..



நாடெங்கும் மின்சார வெட்டு - தினம்
நள்ளிரவில் நடமாடும்
நுளம்புகளோ நமைத் தொட்டு !

வீடெங்கும் எண்ணையிட்ட தட்டு - அதில்
விளையாட நுளம்புகளோ
விருப்பமுறும் மதி கெட்டு !

இயலுமெனில் கொல்லு ..



கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை !

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
ஆவதுண்மைப் பித்து !

பூவிழியால் இழுத்துவைத்துப்
பிழிந்ததெல்லாம் போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்துப்
பிடித்திருந்தால் சொல்லு !

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு !

நொண்டிச் சிந்து ..


பட்டணம் போகாத டி - அங்குப்
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க ழிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் - அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாட்டிலே பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கும்மிச் சிந்து



நெஞ்சுக்கு ளாயிரம் ஆசைக ளோடுது
நேரிழை யேயுன்றன் எண்ணத்தி லே
கெஞ்சுகி றேனுனைக் கேளடி கொஞ்சம்நீ
கொஞ்சிம கிழ்ந்திட லாமிங்கு வா !

நெஞ்சுக னக்கையில் நித்தமு முன்முகம்
நேசத்தி லென்முன்னே நிற்குத டி
அஞ்சுவ தெல்லாமே ஆவிபி ரிந்திடும்
ஆசைக ளாதிக்கஞ் செய்கையி லே !

இரு விகற்ப நேரிசை வெண்பா

பாட்டெழுத வந்தாலே பைங்கிளியே உன்னினைவின்
தேட்டத்தில் நிற்குதடி என்பேனா - கூட்டத்தில்
பாடநான் சென்றாலும் பாடாது தேடுகிறேன்
வாடவிடா தென்னருகே வா !

கும்மிச் சிந்து



பத்துக்குப் பத்தெனப் பாதிநி லத்தினைப்
பாவிக்கு ழந்தைகள் பங்குவைக் க
சொத்துக்கள் சேர்த்திடப் பட்டயென் பாட்டினைச்
சுத்தமாய்க் கண்டவ ராருமில் லை !

நித்தமு மிங்குநான் நித்திரை யின்றியே
நேர்த்தியில் சேர்த்தவை தானித லாம்
மெத்தவும் மேனியில் முத்திய நோயினால்
எத்தனைக் காலம்நா னிங்கிருப் பேன் ?

நொண்டிச் சிந்து ...



அந்தியில் கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும் அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம் போய் - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய் ?

திங்கள், பிப்ரவரி 06, 2017

வெண்பா ...

கண்டு களிப்பதற்குக் கண்ணேவுன் காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ டென்னை நிறுத்து !

சிந்துப் பா ..

தெம்மாங்குப் பாட்டொன்று பாட- கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை
வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் !

சிந்துப்பா ..ஆனந்தக் களிப்பு



தூளியி லென்னைநீ போட்டு - உன்
துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு
நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன்
நோவினைக் கண்டுத விக்கிறேன் வெந்து

ஆகாத வார்த்தையு மில்லை - அம்மா
ஆராரோ பாடிட ஆனந்த மில்லை
நோகாத வாறென்னைப் போட்டு - நொடி
ஒன்றேனும் பாடுநீ நல்லொரு பாட்டு !

வெண்பா ....

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !

சிந்துப்பா ...ஆனந்தக் களிப்பு

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

உள்ளத்தை ஈந்துனக்(கு) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய்! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு காதாய்ச்சொல்
கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு !

நேரிசை வெண்பா ...

கண்ணாடி முன்னின்று கண்ணுக் குமைதீட்டி
வண்ணக் கிளிபோல வந்தால்நீ - என்னுடனே
அத்தானின் தொப்பையினால் ஆகாப் பொருத்தமடி
முத்தேநீ ! போநடந்து முன்

இயல்பு ...



கடலும் நதியும் பேசுவதைக்
... கண்ணால் கண்டோர் எவருமில்லை
கடக்கும் காற்றோ மரங்களுடன்
... கலந்தே பேசும் கேட்பதில்லை
நடக்கும் நிலவோ மேகத்துடன்
... நடந்தே பேசும் தெரிவதில்லை
அடக்கம் நிறைந்த மனிதமுகம்
... அலையெனப் பாய்வது தெரிந்துவிடும்

இரவும் பகலும் இரக்கமுடன்
... இனிதே பேசிப் பிரிந்துவிடும்
பறக்கும் பூச்சிப் பறவையெலாம்
... பாடிக் கூடி இணைந்துவிடும்
நெருப்பும் காற்றும் பகையின்றி
... நேரம் வந்தால் சேர்ந்துவிடும்
பொறுப்பில் லாதவன் கைகளிலே
... பொறுப்புகள் வந்தால் உறங்கிவிடும்

சனி, பிப்ரவரி 04, 2017

விருத்தம் ..



ஆகாயம் பூமியெங்கும் காற்று அலையுது
... அன்றிலெலாம் பனைமடலில் கூடு கட்டுது
கார்கால மேகமெலாம் கலைந்து ஆடுது
... கசிந்துவரும் மழைக்குஅது கான மிசைக்குது
ஊர்கோல மாககிளி உயரப் பறக்குது
... ஒன்றுக்கொன் றுறவாடிப் பாடி மகிழுது
ஊதாரி மனிதமனம் உறங்கிக் கிடக்குது
... ஒற்றையிலே நின்றுவாழ தருணம் பார்க்குது !


பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
... பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
... ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆறறிவோ துவண்டு கிடக்குது
... துரத்திவரும் துன்பங்களோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் பார்க்கத் தவறுது
... முடிவில்லா சிக்கலிலே பகைமை ஓங்குது !

விருத்தம் ..



வானிலோடும் வெண்ணிலவை யாரழைத்தது - அது
வேதனையால் ஏனதனின் முகம் மறைத்தது
'தேனிலவு ' என்றழைத்து மாந்தர்களிப்பதால் - அது
தன்பெயரை தரக்குறைவு என்று நினைத்ததோ !
தென்றலதை தொட்டுப்பார்க்க யார்முனைந்தது - அது
தரித்திடாமல் அங்குமிங்கும் அலைந்து ஓடுது
தழுவுகின்ற மேனியெங்கும் பயந்து உரசுது - இந்த
தரணியிலே மனிதரென்றால் அஞ்சி யொடுங்குது !

கடல்நீரில் கைநனைத்து கலகம் செய்ததார் - அது
கரைபுரளும் அலைகளிடம் சொல்லி யழுதது
அடங்கிடாத அலைகள்கூட சீற்றங்கொள்ளுது - தன்
ஆத்திரத்தை அள்ளிவீச தருணம் பார்க்குது !
வாடுகின்ற உள்ளங்களை நீ மறப்பதால் - உனை
வாழவைக்கும் இதயங்கூட கோபங் கொள்ளுது
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் காணுமிதயமும் - அது
ஓடுகின்ற செயல்நிறுத்தி உன்னைக் கொல்லுது !

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்க்கேதான் பொற்காலம் - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
இல்லா தவர்க்கிழிவே இங்கு

ஒற்றிலா வெண்பா ..

நாளு முனையேநா னாடாத நாளிலையே
கேளு கிளியேநீ கேடெதுவோ - மூளுதடி
வாழநீ வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி !

வெள்ளி, பிப்ரவரி 03, 2017

பாராட்டு ....


இருவிகற்ப நேரிசை வெண்பா ..

பள்ளி கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை 
அள்ளிப் பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள் 
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன் 
சாந்தமுகம் பேசுவதே சான்று

ஹைக்கூ



அக்காவின் கைவளையல்தான்
தேடிக் களைத்து விட்டேன்
அடகுக் கடையை

வியாழன், பிப்ரவரி 02, 2017

புதிர்_வெண்பா 2



கையிருக்கும் காலில்லை கைப்பிடி யில்லாமல்
பையோ டிருப்பவனார் பைங்கிளியே - மெய்யுடையார் 
மேலங்கி போலணியும் மேலாடை யாம்சட்டை 
மேலாத்த லோடுஉம் மேல் !

இன்னிசை வெண்பா ..

நன்றேசெய் நானிலத்தில் நல்வாழ்வு வாழ்வதெனில்
அன்றே லமர்ந்துநீ ஆங்குறங்கு ! தன்னார்வத்
தொண்டாற்றுந் தொண்டர்க்குத் தொல்லையினைத் தாராமல்
ஒன்னா திருந்தே உழல் !

எண்சீர் விருத்தம் ..



காய் - காய்  - மா - தேமா :


மாலையிளங் கதிரொளியில் கண்டேன் அந்த
... மங்கைமுகம் மலரத்தான் கண்ணில் என்றன்
சோலைநிறைப் பூக்களென மலர்ந்தே நெஞ்சில்
...சொப்பனத்தில் கூட அவள் சிரிப்பா ளென்னில்
மாலைவரும் வேளைதனில் மயக்கம் கண்ணில்
...மங்கைமுகம் தான்காணத் துடிக்கும் நெஞ்சம்
பாலையவள் பார்த்திடவே பதறும் மெண்ணம்
...பாழ்மனதில் படுத்திருப்பாள் பாரா தென்னை !

இனம்காணாத் துன்பத்தீ இதயந் தொட்டே
...இக்கணமும் எரிகிறதே ; எரிந்தே வெந்த
மனங்கட்குள் மொட்டவிழ்ந்த காதல் மாயை
... மனங்கொத்திச் செல்வதுவோ ஒற்றைக் காதல்
அனல்சேர்ந்து விளையாடும் அன்பில் வீழ்ந்து
...அலைமோதிச் சாகின்றா ரதுவே உண்மை
தினவெடுத்த நெஞ்சத்தின் கண்கள் கண்டே
... தினமென்னைக் கொல்லுகிறாள் தீயாய் வந்து !

வருத்தம் எனக்குள் ...



கடுப்போ டிருக்கும் அப்பா - தேளின்
கொடுக்கா யிருக்கும் அம்மா
மிடுக்கில் சிரிக்கும் அக்கா - வேலித்
தடுப்பா யிருக்கும் அண்ணா

தொடுத்த காதல் எனக்குள் - ஓங்கி
ஒடுக்கம் காணும் நிலையில்
ஒடுங்கும் மென்றே எண்ணி - ஒரு
நடுக்கம் மெனக்குள் தினமும் ..!

சமநிலை மருட்பா ( கைக்கிளை )



கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய் வந்திடேல்
மாழ்குவே னோவென மனத்திலே கிலியே!

வெண்பா ..

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே - என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ ரார் ?