புதன், ஏப்ரல் 30, 2014

முருங்கை !!

வேலியோரத்தில்
ஓரக் கண்ணால் பார்த்தபடி
நின்றிருந்தாள்
கூந்தல் நிறைந்த பூக்களோடு

தன்னையே
தானம் செய்து செய்தே
தளர்ந்திருந்தது அவள் மேனி


அள்ளிக் கொடுப்பதில்
மகராசிதான்
அந்த பச்சை உடம்புக்காரி

இன்றும்
சிணுங்கியபடியே நின்றிருந்தாள் !
காய்களையும்
இலைகளையும்
கிள்ளியது யாரென்று தெரியவில்லை

இலைகளையும்
காம்புகளையும்
ஒடிக்கும் விரல்களில்
குத்திவிடும் என்பதற்காக
முட்களை
வேண்டாம் என்று சொன்னவள்

அவளின்
மேனி எங்கும்
மருந்தின் வாடை
முதுகுத் தோலை உரித்தாலும்
புன்னகைப்பாள்
புண்ணியம் என்பதற்காக

தறித்தாலும்
தானாகவே தளிர்த்து
நடமாடத் தெரிந்தவள்

தன்னோடு
வந்து ஒட்டிக் கொள்ளும்
மயிர்ப் புழுக்கள்தான்
எல்லாமுமே என்று சொல்லி
அநாயாசமாகச் சிரிக்கின்றாள் ...


  அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, ஏப்ரல் 25, 2014

இறைவா உன் கருணையினால் ..

விண்ணுலகம்  மண்ணுலகம்  என்ப  தெல்லாம்
   வித்தகனே உனதாற்றல் தானே  அன்றி
வின்தொடுத்த  கோல்களுடன்  விடியும்  நாட்கள்
   வெளிச்சத்தால்  வெவ்வேறு  கோலம்  காட்டி
மண்ணவர்க்கும் 
மன்வாழும்  புழுக்கள்  பூச்சி
   மெய்தொடுத்த 
உயிர்கட்கு  ஊணும்   ஊட்டி
எண்ணிலிலா  வளமளித்து  இலங்கச்  செய்யும்
   ஏற்றமிகு  நாயன்யார்  உன்னை  அன்றி  !


இறப்பென்றும்  பிறப்பென்றும்  நிகழ்வ  தெல்லாம்
   இறைவாஉன்  அதிசயத்தில் எண்ணில்  ஒன்று
இரவென்றும்  பகலென்றும்  இயங்கச்  செய்து
   இருளுலகம் ஒளியுலகம்  படைத்துப்  பின்னே
நிரலிட்டு  நீகாட்டும்  அற்பு  தங்கள்
   நினையாத  நெஞ்சங்கள்  நித்தி  லத்தில்
நிரதியற்று  உன்றன்பால்  நிற்போர்க்  கெல்லாம்
   நேர்வழியைக்  காட்டிவிடு  கருணை  கொண்டு  !


தென்றலினால்   தெம்பளித்தாய்  திணறா  வண்ணம்
   தொல்லையற்ற  வாழ்வுமுறை  மறையில்  வார்த்து
வன்முறையில்  வாழ்ந்திடுவோர்  வீழ்ந்தோர்க்  கெல்லாம்
   மென்மனதாய்  மன்னிக்கும் வல்லோன்  நீயே
நன்னெறியைத்  தொடராதோர்  நடத்தை   கெட்டோர்
   என்றின்றி  எல்லோர்க்கும்  அருளால்  அளக்கும்
என்னிறைவா  உனதன்பைக்  கொண்டே  அவரின்
   இதயத்தை இலங்கச்செய்  உந்தன்  ஒளியால்  !


        அஷ்பா அஷ்ரப் அலி 

புதன், ஏப்ரல் 23, 2014

நூல்களை நேசி !!

பூக்களாய்
சிதறிக் கிடக்கும்
புத்தகப் பந்தலில்
கொஞ்சம் கிடந்து பார்
வாசிப்பின் வசீகரம்
உன்னை எட்டிப் பிடிக்கும்


நல்ல நல்ல நூல்களோடும்
தொடர்பு வை  நீ
திக்கித் திக்கி எழுதும்
வார்த்தைகள் கூட
உனக்கு அடிமையாகும்


வாசிப்பின் வாசம் புரிய
சுவாசிக்கும் நீ
வாசிப்போடும் நட்பு கொள்
உன்னோடு
கை கோர்த்து நடந்து வரும்


வசப்படாத
வார்த்தைகளும்
உனக்குள் பிரசவமாகும்
வாசிப்பின் வசியம் புரிந்தால்


வார்த்தைக் குழப்பத்தில்
வழுக்கி வழுக்கி
விழுகிறாயா
வாசிப்பு மழையில்
நனைந்து பார்


அறிமுகமில்லாத
சொற்கள் எல்லாம்
உன் நெஞ்சில் கிடந்து
ஊஞ்சல் ஆடும் ..

-- அஷ்பா அஷ்ரப் அலி  --  ( ஏப்ரல் 23 உலக புத்தக தினம் )

வியாழன், ஏப்ரல் 17, 2014

வேண்டாம் இனவாதம் !

அவனிவந்த மதங்கள் எல்லாம்
   அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
   அமைதி கண்டது - எங்கும்
   இமைகள் திறந்தது

தவமிருந்து வளர்ந்த மதம்
   தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
   தனித்து வளருது - ஏனோ
   தொனியைத் தூக்குது

வேதமோதும் குருக்கள் இங்கு
   வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
   வாசம் வருகுது - எங்கோ
   மோசம் நடக்குது

பிணங்கள் உண்ணும் மிருகமாகி
   போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
   பகையை வளர்க்கிறான் - ஊதி
   புகையை வார்க்கிறான்

உயர்ந்து நிற்கும் வேதமிதும்
   உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
   உணரும் நாள்வரும் - கூட
   திணறும் நாள்வரும்

இன்னல் படும் இனத்தவரே
   இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
   சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
   சிந்தி நிற்பதேன்

வேதம் சொன்ன வாக்குகளில்
   வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
   வளைந்து நிற்பதேன் -  நிலையில்
   குலைந்து நிற்பதேன்


     அஷ்பா அஷ்ரப் அலி 

புதன், ஏப்ரல் 09, 2014

வெண்ணிறத்துக் கன்னி !

வார்த்தெடுத்த வனப்பினிலே வடிவழகைக் காட்டி
     வான்பரப்பில் வளம்வருவாள் 
வெண்ணிறத்துக் கன்னி
நேர்த்தியுடன் நித்திலத்தில் நிலவொளியாய் வீச
     நீல்கடலில் குளித்
தெழுவாள் நித்தமிந்த கள்ளி !

பார்தொடுத்த இடத்திலெல்லாம் பகலவனைப் போல
     பனிஇரவில் பாய்விரிப்பாள் தன்னொளியை ஈந்து
ஆர்ப்பரிக்கும் ஆவலினால் நாணம்வரும் வேளை
     நாணியவள்
முகமறைப்பாள் மேகத்திரைத் தொட்டு !

காலையிளம் பனியினிலே
கால்கழுகிப்  பின்னே
     கதிரவனைக் காணுமுன்னே நழுவிடுவாள் மெல்ல
சோலைக்கிளிக் கூட்டமெல்லாம் கூடி ; அவள்
     சார்ந்திருந்த சோகத்திலே கீதமெனப் பாட !

வேளையிது
விடியலெனச் சேவல்களும் கூவும்
     வாடிநின்ற பயிரும்புல்லும்  எழுந்துநின்று வாழ்த்தும்
மாலைவரை காத்திருக்க கண்கலங்கி நின்ற
     மங்கையந்த வெண்ணிலவாள் மனமிழந்து நடப்பாள் !


          அஷ்பா அஷ்ரப் அலி 

திங்கள், ஏப்ரல் 07, 2014

எழுந்து விடு !

துணிந்திடு வாழ்வினில் துயரமில்லை
      தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும்  நிலைப்பதில்லை
      காமுக நட்பும் வளர்வதில்லை !


அணிகளாய் இணைந்திட யாருமில்லை
      ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
      தெருமுனை வரையும் வருவதில்லை !


அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
      அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
      பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !


மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
      வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
      உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !


அளந்தது உன்னை இழப்பதில்லை
      அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
      தடைவரும் முன்னே எழுந்துவிடு !!


                அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

மனிதம் மட்டும் ..

ஆற்றின் கரையினில் ஆட்டமிடும் - நாணல்
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை

காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக் 
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்

நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை

தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித் 

துரத்துவ தொன்றே என்கவலை 



  -- அஷ்பா அஷ்ரப் அலி  --

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

தீயெனச் சுடுவதெல்லாம் ...

ஆழ்கடலில் முத்தெடுக்க குளிப்போர் எல்லாம்
          ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
          எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !

சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
          சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
          உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !

சூழ்ந்து
எழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
          சோர்வடைந்து  வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
          பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !

கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
          கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
          நாரெனவே
கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !

ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
          அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
          தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !


   அஷ்பா அஷ்ரப் அலி