புதன், ஏப்ரல் 30, 2014

முருங்கை !!

வேலியோரத்தில்
ஓரக் கண்ணால் பார்த்தபடி
நின்றிருந்தாள்
கூந்தல் நிறைந்த பூக்களோடு

தன்னையே
தானம் செய்து செய்தே
தளர்ந்திருந்தது அவள் மேனி


அள்ளிக் கொடுப்பதில்
மகராசிதான்
அந்த பச்சை உடம்புக்காரி

இன்றும்
சிணுங்கியபடியே நின்றிருந்தாள் !
காய்களையும்
இலைகளையும்
கிள்ளியது யாரென்று தெரியவில்லை

இலைகளையும்
காம்புகளையும்
ஒடிக்கும் விரல்களில்
குத்திவிடும் என்பதற்காக
முட்களை
வேண்டாம் என்று சொன்னவள்

அவளின்
மேனி எங்கும்
மருந்தின் வாடை
முதுகுத் தோலை உரித்தாலும்
புன்னகைப்பாள்
புண்ணியம் என்பதற்காக

தறித்தாலும்
தானாகவே தளிர்த்து
நடமாடத் தெரிந்தவள்

தன்னோடு
வந்து ஒட்டிக் கொள்ளும்
மயிர்ப் புழுக்கள்தான்
எல்லாமுமே என்று சொல்லி
அநாயாசமாகச் சிரிக்கின்றாள் ...


  அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: