ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

மனிதம் மட்டும் ..

ஆற்றின் கரையினில் ஆட்டமிடும் - நாணல்
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை

காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக் 
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்

நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை

தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித் 

துரத்துவ தொன்றே என்கவலை 



  -- அஷ்பா அஷ்ரப் அலி  --

கருத்துகள் இல்லை: