வியாழன், ஜூன் 02, 2016

ஒன்றிணைவோம் !

தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
  தளிர்க்கின்ற ஈனத்தைக் களை  யெடுப்போம்
வானத்தை  வரச்சொல்லி  மண்ணைக்காக்க - எங்கும்
  வளர்கின்ற  மரங்கட்கு  காவல்  நிற்போம்
கானகத்தைக் கையோடு இணைத்தபடி  - வரும்
  கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
  ஊரூராய்  சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
  பொன்வளத்தைப் பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம்  - அவர்
  மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்
என்னிருகண்  மணியிந்த  நாடுஎன்று - இங்கு
  எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
  தொன்றுதொட்டு வாழ்வதென உறக்கச் சொல்வோம் !

கருத்துகள் இல்லை: