வெள்ளி, மார்ச் 03, 2017

சிறப்புத் திங்கள் ..



எல்லாப் புகழும் நிறைந்தோனே
ஏற்றம் பெற்றோ னுனையேநாம்
அல்லும் பகலும் தொழுகின்றோம்
ஆற்றல் பெற்றோ னுனைநாடி !

உள்ளும் புறமும் அறிந்தவனே
ஓங்கும் மறையை யளித்தவனே
சொல்லால் செயலால் தினந்தோறும்
சொர்க்கம் வேண்டித் துதிக்கின்றோம் !

இன்னா ரிவர்தா னென்றின்றி
எல்லார்க் கும்முன் அருளாலே
ஒண்ணா திருப்பார் அவர்க்கும்தான்
ஓங்கி வழங்கும் வல்லோனே !

எங்கும் நிறைந்தோன் உனதாற்றல்
எண்ணிப் புகழ வருகிறதே
திங்கள் ரமழான் இகமெங்கும்
தித்திப் புடனே உனைப்போற்ற !

நன்றே அறங்கள் நாம்செய்ய
நாயன் தந்தா னித்திங்கள்
ஒன்றிப் புரிவோம் நல்லறங்கள்
ஓதிக் களிப்போம் அருள்மறையை !

எண்ணிப் புகழ்வோ மிறையோனை
ஏற்றம் பெறவே எம்வாழ்வில்
கண்ணீர் சிந்திக் கையேந்தி
கனிவாய்க் கேட்போ மவனிடமே !

இரப்பார்க் கீயும் கடமையினை
இனிதே புரிவோ மின்முகமாய்
விரதம் மிருந்தே நற்கிரியை
விருப்பம் போல நாம்செய்தே !

பிறப்பால் சிறந்தோர் நமக்காக
பிறந்த மாதம் ரமழானின்
சிறப்பை யறிந்தே சிந்தித்தே
செயலால் காட்டி மகிழ்வோமே !

கருத்துகள் இல்லை: