வெள்ளி, மார்ச் 03, 2017

யார் தலைவன் ?



கூழ்வேண்டிக் கெஞ்சுகின்ற நிலையே வந்தும்
குனியாது வலையாது நிமிர்ந்தே நிற்பான்
சீழ்ஒழுகி சிதைந்திட்ட போழ்தும் தேகம்
சிதையாத உளத்தோடு என்றும் வாழ்வான்

வீழ்கின்ற நிலைவந்தும் விடிவைத் தேடி
வீர்கொண்டு நமக்குள்ளே நடந்தே செல்வான்
கீழ்மக்கள் மேன்மக்கள் என்றே யன்றி
கிடைக்கின்ற வாய்ப்பெல்லாம் அளிப்பான் அள்ளி

பதைக்கின்ற நெஞ்சத்தைப் பகுத்தே வைத்துப்
பகிடிக்கும் தன்மானம் இழக்கச் செய்யான்
வதைக்கின்ற துன்பங்கள் வந்தா லென்ன
வளையாமல் அஞ்சாமல் நிமிர்ந்தே நிற்பான்

அதிகாரம் அவன்மேலே படரக் கண்டும்
அவனேநான் மறவனெனத் துணிந்தே சொல்வான்
எதிர்ப்புக்கும் அப்பாலே எழுந்தே நின்று
எத்திக்கும் தன்னார்வத் தொண்டே செய்வான்

தன்மேலே முத்துக்கள் சொரிந்தா லென்ன
தகிக்கின்ற எதிர்ப்புக்கள் சூழ்ந்தா லென்ன

தன்ஆத்மா தன்னின்பம் தொண்டே யென்று
தளராமல் நிற்போனே நம்மில் தலைவன்!!

கருத்துகள் இல்லை: