வெள்ளி, மார்ச் 03, 2017

விருத்தம் ...



ஆகாயம் பூமியெங்கும் காற்று அலையுது
அன்றிலெலாம் பனைமடலில் கூடு கட்டுது
வாகாக வரும்மேகம் களைந்து ஆடுது
வருமழைக்குத் தோதாக கான மிசைக்குது
ஊர்கோல மாகக்கிளி உயரப் பறக்குது
ஒன்றுக்கொன்று உறவாடிப் பாடி மகிழுது
வேரறுந்த மனிதமனம் உறங்கிக் கிடக்குது
வேற்றுமையில் நின்றுமாளத் தருணம் பார்க்குது

பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆரறிவோ துவண்டு கிடக்குது
துரத்திவருந் தொல்லைகளோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் முந்திக் கொள்ளுது
முடிவில்லாச் சிக்கலிலே மூக்கை நுழைக்குது !

தேட்டத்தில் ஏழைகளின் கைகள் நீளுது
தெரியாதார் போல்சிலரின் மனமும் போகுது
கூட்டத்தில் கூப்பாட்டின் சிரிப்புக் கேட்குது
கொள்கையிலா தலைவர்களின் கைக ளோங்குது
காப்பாற்ற ஆருமின்றி ஏழ்மை சிணுங்குது
கண்டுநிதம் இயற்கைவளக் கண்கள் சிவக்குது
தாள்ப்பாளைப் போட்டுவிட்டா லென்ன என்பதை
தள்ளிநின்று தரும்வளங்கள் அங்க லாய்க்குது !

கருத்துகள் இல்லை: