சனி, அக்டோபர் 13, 2012

என் மாமி !

என் அருமை மாமிக்கு
என்ன என்ன செய்தாலும்
என்னையே பலி தீர்க்கும்
எண்ணத்தை யாது சொல்வேன் !

வகை வகையாய் கறி சமைத்து
மனம் மணக்க வைத்தாலும்
தொகை தொகையாய் குறை கூறும்
பாங்குள்ள மாமி இவள் !

சாப்பாட்டில் உப்பு இல்லை
சப்பென்று இருக்குதென்று
போடுகின்ற கூச்சலிலே
பக்கத்துக்கு வீடதிரும் !

சேலை எந்தன் கலைந்தாலும்
வேலையின்றி இருந்தாலும்
காளை அதன் திமிர் போல
சோலையம்மாள் பொங்கிடுவாள்!

திண்ணையிலே நானிருந்து
கண்ணைக் கொஞ்சம் அயர்ந்தாலும்
பண்ணையார் மகளோ என்று
பல நூறு கதைகள் சொல்வாள் !

காலையிலே போனவரு
மாலையிலே வருவாரே
வாசலிலே நின்றவரை
வழி நோக்கிப் பார்த்தாலும்
மோப்ப நாய் முகர்வது போல்
முகர்ந்து பின்னே வந்திடுவாள் !

அந்தி சாயும் நேரத்தில்
அவரருகே நானிருந்தால்
சிந்தனையே இல்லாமல்
பத்திரக் காலியாவள்!

காலையிலே குளித்து விட்டு
கல கலப்பாய் நான் வந்தால்
மலை முறிந்து போனதுபோல்
தலையினிலே அடித்துக்கொள்வாள் !

நான் மறு பிள்ளை பெற்றெடுக்க
மறுக்கின்ற என் மாமி
கருவுற்று நான் இருந்தால்
கஷ்டமடி எனக்கு என்பாள் !

இரண்டோடு போதுமென்று
இறுமாப்பாய் இழுபடுவாள்
முரண்பாடு கொள்வதிலே
முற்போக்குக் காரியவள் !

வயதாகிப் போச்சுதென்று
வழி விட்டுப் போனாலும்
தலை மேலே ஏறி நின்று
கரகாட்டம் ஆடுகிறாள் !

சித்தமே பிடித்து விடும்
போல் இருக்கு ஆண்டவனே
இருவரிலே ஒரு உயிரை
சீக்கிரமே எடுத்து விடு !!!!!