சனி, ஜனவரி 24, 2015

நானும் தங்கையும் ..

அல்லோல
கல்லோலப்பட்டது வீடு
அந்த
அதிகாலையிலேயே !

அடித்துக் கொள்ளாதது
மட்டும்தான் ..

எதிரும் புதிருமாக
வீசிக்கொண்டிருந்தார்கள்
வார்த்தைகளை
அந்த இருவருமே ..

பதற்றத்தில்
பாதி மறந்திருந்தது
நேற்றிரவு
மனப்பாடம் பண்ணிய
வாய்ப்பாடு எனக்கு ..

இவர்களின்
சொல்லடியை விட
டீச்சரின் பிரம்படி
அவ்வளவு
வலிப்பதில்லை
பழகி விட்டது ..

பாவம்
தங்கைதான்
தரையில் கிடந்தபடி
அழுகை நிறுத்தி
பொறுக்கிக் கொண்டிருக்கிறாள் ..

இவர்கள் வீசும்
அசுத்த வார்த்தைகளை
ஒன்றுமே புரியாத படி !


* அஷ்பா அஷ்ரப் அலி *

வியாழன், ஜனவரி 01, 2015

நாளெல்லாம் காணுகின்றேன் ...

நாணமோ நடைப்பி ணம்போல்
 நளினமோ புள்ளிக் கோலம்
ஊனமாய் உறவு எல்லாம்
 ஒன்றிடக் காண்ப தில்லை
வீணென வாதம் வைப்போர்
 வீதியில் வழக்கு மன்றம்
நானிதைக் காணு கின்றேன்
 நடைமுறை வாழ்வி லிங்கே

கூனலாய் கல்வி ஏட்டில்
 குழப்பமே பள்ளி தோறும்
கானலே அருவி என்று
 கனவினில் இளைஞர் கூட்டம்
நானெனத் திமிரி லுள்ளோன்
 நாடக மாடும் விந்தை
நாளெலாம் காணு கின்றேன்
 நடப்பதை அருகி ருந்து

வானமிங்கு விருந்து வைக்க
 வயல் வெளிகள் வரண்டிருக்க
கானகமும் களை இழந்து
 காட்சியெலாம் கண்ணி ருண்டு
வாய்மைகூட வளைந்து நிற்க
 வல்லமையே ஓங்கிப் பேச
மாயமென்ன நடக்கு தென்று
மாய்ந்தழுதே காணு கின்றேன்


- அஷ்பா அஷ்ரப் அலி -