வெள்ளி, ஜூன் 03, 2016

வெளி விருத்தம்


கண்ணில் காணும் கவிதைகள் சொல்லும் - கவிதைகளாய்
எண்ணம் சொல்லும் என்றன் பேச்சும் - கவிதைகளாய்
கன்னக் குழியின் கவர்ச்சியு முணர்த்தும் - கவிதைகளாய்
தென்னங்  கீற்றும் தெவிட்டா சுவையும் - கவிதைகளாய்


அல்லும் பகலும் ஆதியை வணங்கு - வாழ்நாளில்
சொல்லில் செயலில் சோரா நடப்பாய் - வாழ்நாளில்
கள்ளுஞ் சூதுங் களவுங் களைவாய் - வாழ்நாளில்
உள்ளம் சேர உணர்வு தருவாய் - வாழ்நாளில் 

நேரிசை ஆசிரியப் பா !


நன்னிலை பெற்றோர் ஞானத் துளவுந்
தன்னிக ரற்றத் தமிழே உன்னைத்
தாய்மொழி கொண்ட தமிழர் தம்மில்
வாய்மொழி கேட்க வந்திடுஞ் சினமே

அந்நிய மொழியே அசையும் நாவில்
புண்ணிய மொழியாம் பூந்தமி ழென்றே
கலப்படஞ் செய்யுந் தமிழினம்
விலக்கிட வேண்டும் விரைகநட் புகளே !

ஹைக்கூ


எப்போதோ எறிந்த கல்
வெளியேறத் தடுமாறுகிறது
வற்றிய குளத்தில் 

துளிப்பா !


ஏறி
இறங்கிவிட்டேன்
எல்லா வரிகளிலும்
என்னை
எந்த வரியில் வைத்தாய்
உன் கவிதைகளில் !

ஆரறிவார் ?


கள்ள முள்ள நெஞ்சினில்
உள்ள தெல்லாம் கருப்புதான்
நல்ல உள்ள முள்ளவர்
இல்லை யிங்கு உண்மைதான்

அள்ளு கின்ற நிலைவரின்
உள்ள தெல்லா மள்ளுவார்
சொல்லு கின்ற  வார்த்தையில்
சொல்லி ழுக்குச் சுமத்துவார்

வெள்ளை யுள்ள  முள்ளவர்
உள்ள தெனில்  எம்மிலே
கல்லில் வெட்டி அவர்பெயர்
எல்லைக் கல்லாய் நாட்டுவோம் !

அழகு !

ஒரு
குழந்தையைப் போலக்
கொஞ்சியபடியே பேசுகிறாய்
நகத்தைக்
கடித்தபடியே சிரிக்கிறாய்

இமைகள் சுழற்றி
கதை சொல்கிறாய்
இல்லையென்று  இல்லை
எல்லாமே அழகுதான்

உன்
தோள்தொட்டுப்
பேசும்போது மட்டும்
சரிந்து விழாத
முந்தானையை
சரி செய்து கொள்வாயே
மிஞ்சி விடுகிறது !

யதார்த்தம் ....

அன்புள்ளங் கொண்டோரே மக்கள் - நட்
பண்பில்லா தொரெல்லாம் மாக்கள்
அன்னத்தின் இடையூறே விக்கல் - அதன்
ஆதிக்கம் நிறைந்தாலே சிக்கல்

கன்னத்தின்  அடையாளம் முத்தம் - அதைக்
கடைந்தாலே  தினமேறும் பித்தம்
எண்ணத்தின் ஏக்கம்தான் காதல் - அது 
ஏற்காத நிலையேதான் சாதல்

வண்ணத்தின் சேர்க்கைதான் காட்சி - பெரும்
வம்புகளின் கூட்டுறவே சூழ்ச்சி
பிண்டங்கள் இணைவதுவே புணர்ச்சி - மனம்
பிணைந்தின்பம் காண்பதுவே மகிழ்ச்சி


மேகத்தின்  சேர்க்கைதான் மின்னல் - தேகம்
மோகத்தில் வீழ்ந்தாலே இன்னல்
போகத்தின் துள்ளத்தான் துன்பம் - வெற்றிப்
பெருக்கத்தின் உணர்வேதான் இன்பம் !

போற்றுங்கடா .....



மனையினைக் காத்திடும் மனைவியவள் - நல்
மான்பினைத் தினமும் போற்றுங்கடா
மனையினில் தீபச் சுடரொளியாய் - புது
மங்கலம் நிறைவதைப் பாருங்கடா

துணையெனக் கண்டவள் துன்பமெல்லாம் - உன்
தோளினில் கிடப்பவள் காட்சியடா
அணைத்திட மட்டுமா அவளுனக்கு - இல்லை
அனைத்திலும் உனக்கே சொந்தமடா


தன்னையே தந்தவள் தரணியிலே - தரம்
தாழ்ந்திட  வாய்ப்பே  இல்லையடா
பண்புடன் வாழ்பவள் நெஞ்சினிலே - புதுப்
பொலிவுடன் கிடந்தே வாழுங்கடா


தன்னிக ரற்ற  அன்பிலவள் - தினம்
தளும்பிடும் குமுறலைக் கேளுங்கடா
இன்முகத் தாலவள் கைகோர்த்து - என்றும்
இன்பக் கடலில் மூழ்குங்கடா !

காவடிச் சிந்து


சின்னக்கு ழந்தைநீ  தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
    சிதைப்பரடி வதைப்பாரடி
     இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !


கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ  யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
   கனவேயிது நனவாகுது
    கனியேயிது  கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந்  தொல்லையே !

கடலன்னை !

அலையெனப்  பொங்கும் ஆழிதரும்
   அற்புதம்  நமக்குப்  பலவாகும்
விலையெனப்  போகும் நல்முத்தும்
   விளைப்பவள்  நமது கடலன்னை

தலைவிரித்  தாடிடும் தருணத்தில்
   தடல்புடல்  என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந்  தவளே நின்றாலும்
   நிம்மதி தரைக்கும் அவளன்றோ


பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
   பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
   தலைகவி ழாதாவள் கடலன்னை


இகத்தினி லலையும் பூங்காற்றும்
   இதமா யவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே யில்லாத் தேகசுகம்
   நித்தம் தருவதும் கடலன்னை


அறுசுவை யுணவுக் குயிராகும்
   ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் அமைதியில் வழிந்தோடி
   ஆறுத லடைவதும் இவள்மடியே


நிறைந்தவள்  இகத்தினில் முப்பங்கு
   நிலத்திடை  அளவோ  ஒருபங்கு
வரையறை யில்லா வளங்கொண்டே
   வாழ்பவள் நமக்குள் கடலன்னை !

வியாழன், ஜூன் 02, 2016

வருகிறதே சிறப்புத் திங்கள் !

எல்லாப் புகழும் நிறைந்தோனே
   ஏற்றம் பெற்றோ னுனையேநாம்
அல்லும் பகலும் தொழுகின்றோம்
   ஆற்றல் பெற்றோ னுனைநாடி

உள்ளும் புறமும் அறிந்தவனே
   ஓங்கும் மறையை யளித்தவனே
சொல்லால் செயலால் தினந்தோறும்
   சொர்க்கம் வேண்டித் துதிக்கின்றோம்


இன்னா ரிவர்தா னென்றின்றி
   எல்லார்க் கும்முன் அருளாலே
ஒண்ணா திருப்பார் அவர்க்கும்தான்
   ஓங்கி வழங்கும் வல்லோனே


எங்கும் நிறைந்தோன் உனதாற்றல்
   எண்ணிப் புகழ வருகிறதே
திங்கள் ரமழான் இகமெங்கும்
   தித்திப் புடனே உனைப்போற்ற


நன்றே அறங்கள் நாம்செய்ய
   நாயன் தந்தா னித்திங்கள்
ஒன்றிப் புரிவோம் நல்லறங்கள்
   ஓதிக் களிப்போம் அருள்மறையை


எண்ணிப் புகழ்வோ மிறையோனை
   ஏற்றம் பெறவே எம்வாழ்வில்
கண்ணீர் சிந்திக் கையேந்தி
   கனிவாய்க் கேட்போ மவனிடமே


இரப்பார்க் கீயும் கடமையினை
   இனிதே புரிவோ மின்முகமாய்
விரதம் மிருந்தே நற்கிரியை
   விருப்பம் போல நாம்செய்தே


பிறப்பால் சிறந்தோர் நமக்காக
   பிறந்த மாதம் ரமழானின்
சிறப்பை யறிந்தே சிந்தித்தே
   செயலால் காட்டி மகிழ்வோமே !

காவடிச் சிந்து

கூடிநீ  வாழ்ந்திடு கண்ணே - உயிர்
கூடுக ளைந்திடு முன்னே - என்றும்
  குடியாதிரு  குலையாதிரு
   வடிவாயொரு விடிவேவரக்
  கொழிக்கும் - வாழ்வு - செழிக்கும்


கொள்கைக ளோடேநீ நின்று - கொண்ட
கொள்கைதான் வாழ்வென்ற னென்று - நீ
     குறியாயிரு குனியாதிரு
     வறியோனென வளையாதிரு
      குளிர்வாய் - வாழ்வில் - மிளிர்வாய் !

காவடிச் சிந்து

அஞ்சனங்கள் சூழ்ந்தவிழி யோடு - ஒரு
ஆரணங்கைக் கண்டதனால் பாடு - தினம்
     அன்னநடைப் போட்டுவரும்
     சின்னயிடைக் காணமனம்
     ஆறும் - அதன்வா - யூறும்

கொத்துமலர்க் கூந்தலிலே சூடி - ஒரு
கோலமயில் போல்வருவா  ளாடி - தினம்
    கொஞ்சுமொழிப்  பேசுமிதழ்
    மிஞ்சிவிடும் பேரழகைக்
    கூட்டி - ஆவல் - ஊட்டி

சின்னவிழிப் பார்வையினால் சீண்டி - பலர்
சிந்தையையும் நாள்முழுதுந்  தீண்டி - அவள்
     செவ்வழகைக்  காண்பவரில்
      எவ்வயதும் தான்பதறச்
      செய்யும் - அதவே - மெய்யும் !

காதலியே !

மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா


இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா


இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா - உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா ?

காவடிச் சிந்து

ஊமையராய்  வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது  சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம்  - ஏழ்மைக் - கோலம்

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரினைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் 

ஒன்றிணைவோம் !

தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
  தளிர்க்கின்ற ஈனத்தைக் களை  யெடுப்போம்
வானத்தை  வரச்சொல்லி  மண்ணைக்காக்க - எங்கும்
  வளர்கின்ற  மரங்கட்கு  காவல்  நிற்போம்
கானகத்தைக் கையோடு இணைத்தபடி  - வரும்
  கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
  ஊரூராய்  சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
  பொன்வளத்தைப் பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம்  - அவர்
  மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்
என்னிருகண்  மணியிந்த  நாடுஎன்று - இங்கு
  எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
  தொன்றுதொட்டு வாழ்வதென உறக்கச் சொல்வோம் !

புதன், ஜூன் 01, 2016

இன்னிசை வெண்பா !


மையிருட்டி  லும்உன்றன்  மாயவிழி  பேசுவதைக்
கையடங்கி நீகிடக்கக் காண்பேனே - மெய்யுருகி
ஐயமின்றி என்நெஞ்சில் ஆள்கையிலும்  நானறிவேன்
தையளுன்றன் கண்ணின்சா  டை !

வளையற் சிந்து

கல்வியதைக்  கற்றிடுவாய்
கசடறவே  நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால்  சூழும் - நல்ல
காலமுன்னில்  கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !


கல்வியுனக் களித்தவரைக்
காலமெல்லாம் போற்று - அவர்
காலடியில்  ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த  கூற்று !

சிந்துப் பாடல் ( இலாவணி )


நெம்பதுபோல் நாள்முழுதும்
நேரடியா யுன்னினைவே
நெஞ்சினிலே குத்துதடிப்
பெண்ணே ! பெண்ணே !
செம்பவள  வாய்திறந்து
சேதியொன்னு சொல்லுவந்து
சேர்ந்திருப்போ மிக்கணமே
கண்ணே ! கண்ணே !

கண்குளிரக் காட்சிகளே
கண்ணேவுன் கண்களிலே
காணநிதம் கண்ணெதிரே
வாடீ ! வாடீ !
பெண்ணழகுப் பூத்திருக்கும்
பொய்கையடி உன்னழகில்
பேரின்பம் கொள்ளவுனைத்
தாடீ ! தாடீ !


என்னிருகண்  ணின்மணிபோல்
என்றுமுனைக் காத்திடுவேன்
ஏறெடுத்துப்  பாரடிநீ
என்னை ! என்னை !
அன்னமதைப் போல்நடந்து
ஆடிவந்தால் வாசலுக்கு
ஆவலுடன் ஏந்திடுவேன்
உன்னை ! உன்னை !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !

கொட்டுகின்ற வெய்யிலிலே கொப்புளங்கள் ஏராளம்
சொட்டு மழையில்லாத் தொல்லையிது - வெட்டவெளிப்
போட்டல்போ  லில்லம் ; புழுக்கமாம் பாய்விரிக்க
எட்டாத் தூரத்தில் இவள் !

சதிமறந்து ....

காலையிளங் கதிரொளியில்
குளித்திருக்கும் புல்லும் - அந்த
கருக்களிலும் கண்திறக்கும்
கதிர்நிறைந்த நெல்லும்

வாலையிளங் குமரிகளாய்
வயல்பரப்பில் எங்கும் - வடி
வழகுகாட்டி நெல்மணிகள்
வனப்பெடுத்துப் பொங்கும்

சோலைக்கிளிக்  கூட்டங்களோ
சுதிதொடுத்துப் பாடும் - அந்த
சுகத்தினிலே நெல்மணிகள்
சதிமறந்து  ஆடும் !

வான் மேகத்திலே !


வான்மேகக்  கூட்டத்தில்
  வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
  குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
  கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
  முகம்மூட வேண்டும் - இந்த
விண்பூக்கள் ஒவ்வொன்றும்
  உனைப்பார்க்க  வேண்டும் - இங்கே
மண்வாழும்  மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

உன்னைத்தான் !

நேசமிலாமல் இருந்திடலாம்
  நெருக்கடி யின்றியும் இருந்திடலாம்
வேசமிட் டெவனும் இருந்துவிட்டால்
  வெறுத்தே உலகம் உமிழ்ந்துவிடும்

அணிகல னின்றி இருந்திடலாம்
  அவதி யிலாமலும் இருந்திடலாம்
துணிவில் லாமல் இருந்துவிட்டால்
  துன்பம் உன்னைத் துரத்திவரும்

கலகம் தவிர்த்தும் இருந்திடலாம்
  களவில் லாமலும்  இருந்திடலாம்
கலக்கம் கொண்டே இருந்துவிட்டால்
  காலம் உன்னைக் கழித்துவிடும்

அலைச்ச லிலாமல் இருந்திடலாம்
  அலுப்பில் லாமலும்  இருந்திடலாம்
உழைப்பில் லாமல்  இருந்துவிட்டால்
  உலகம் உன்னைக் கேலிசெயும் !