வெள்ளி, பிப்ரவரி 24, 2017

மண்ணைக் காப்போம் ..



தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
தளிர்க்கின்ற ஈனத்தைக் களை எடுப்போம்
வானத்தை வரச்சொல்லி மண்ணைக்காக்க – எங்கும்
வளர்கின்ற மரங்கட்கு காவல் நிற்போம்


கானகத்தை கையோடு இணைத்தபடி - வரும்
கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
ஊரூராய் சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
பொன்வளத்தை பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம் - அவர்
மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்



என்னிருகண் மணியிந்த நாடுஎன்று - இங்கு
எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
தொன்றுதொட்டு வாழ்வதென உரக்கச் சொல்வோம் !

கருத்துகள் இல்லை: