வெள்ளி, ஏப்ரல் 25, 2014

இறைவா உன் கருணையினால் ..

விண்ணுலகம்  மண்ணுலகம்  என்ப  தெல்லாம்
   வித்தகனே உனதாற்றல் தானே  அன்றி
வின்தொடுத்த  கோல்களுடன்  விடியும்  நாட்கள்
   வெளிச்சத்தால்  வெவ்வேறு  கோலம்  காட்டி
மண்ணவர்க்கும் 
மன்வாழும்  புழுக்கள்  பூச்சி
   மெய்தொடுத்த 
உயிர்கட்கு  ஊணும்   ஊட்டி
எண்ணிலிலா  வளமளித்து  இலங்கச்  செய்யும்
   ஏற்றமிகு  நாயன்யார்  உன்னை  அன்றி  !


இறப்பென்றும்  பிறப்பென்றும்  நிகழ்வ  தெல்லாம்
   இறைவாஉன்  அதிசயத்தில் எண்ணில்  ஒன்று
இரவென்றும்  பகலென்றும்  இயங்கச்  செய்து
   இருளுலகம் ஒளியுலகம்  படைத்துப்  பின்னே
நிரலிட்டு  நீகாட்டும்  அற்பு  தங்கள்
   நினையாத  நெஞ்சங்கள்  நித்தி  லத்தில்
நிரதியற்று  உன்றன்பால்  நிற்போர்க்  கெல்லாம்
   நேர்வழியைக்  காட்டிவிடு  கருணை  கொண்டு  !


தென்றலினால்   தெம்பளித்தாய்  திணறா  வண்ணம்
   தொல்லையற்ற  வாழ்வுமுறை  மறையில்  வார்த்து
வன்முறையில்  வாழ்ந்திடுவோர்  வீழ்ந்தோர்க்  கெல்லாம்
   மென்மனதாய்  மன்னிக்கும் வல்லோன்  நீயே
நன்னெறியைத்  தொடராதோர்  நடத்தை   கெட்டோர்
   என்றின்றி  எல்லோர்க்கும்  அருளால்  அளக்கும்
என்னிறைவா  உனதன்பைக்  கொண்டே  அவரின்
   இதயத்தை இலங்கச்செய்  உந்தன்  ஒளியால்  !


        அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: