வெள்ளி, பிப்ரவரி 24, 2017

கடலன்னை ....



அலையெனப் பொங்கும் ஆழிதரும்
அற்புதம் நமக்குப் பலவாகும்
விலையெனப் போகும் நல்முத்தும்
விளைப்பவள் நமது கடலன்னை
தலைவிரித் தாடிடும் தருணத்தில்
தடல்புடல் என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந் தவளே நின்றாலும்
நிம்மதி தரைக்கும் அவளன்றோ !


பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
தலைகவி ழாதவள் கடலன்னை
இகத்தினி லலையும் பூங்காற்றும்
இதமா யவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே யில்லாத் தேகசுகம்
நித்தம் தருபவள் கடலன்னை !


அறுசுவை யுணவுக் குயிராகும்
ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் அமைதியில் வழிந்தோடி
ஆறுத லடைவதும் இவள்மடியே
நிறைந்தவள் இகத்தினில் முப்பங்கு
நிலத்திடை அளவோ ஒருபங்கு
வரையறை யில்லா வளங்கொண்டே
வாழ்பவள் நமக்குள் கடலன்னை !

கருத்துகள் இல்லை: