சனி, பிப்ரவரி 25, 2017

எண்சீர் விருத்தம் ...



நற்சீராய் நீரோடி வயல்விளையக் கண்டேன்
... நாற்றெல்லாம் தலைநிமிர்த்தி சிரிப்பதையும் கண்டேன்
முற்றியநெற் கதிரறுக்கும் கிளிகளையும் கண்டேன்
... முழுநிலவின் ஒளியினிலே சிதறியநெல் கண்டேன்
உற்சாகம் இழந்தோராய் உலகினரைக் கண்டேன்
... ஊஞ்சல்கட்டி ஆடுகின்ற இனவாதம் கண்டேன்
குற்றமிழைத் தோரெல்லாம் தப்புவதைக் கண்டேன்
... கொள்கையிலே நிற்பவர்கள் குமுறுவதைக் கண்டேன் !


தற்பெருமை கொண்டவரைத் தரணியிலே கண்டேன்
... தலைவிரித்து ஆடுகின்ற பொல்லாங்கைக் கண்டேன்
கற்பனையில் வாடுகின்ற குமரிகளைக் கண்டேன்
... கண்ணீரில் ஏழையவர் இன்னலினைக் கண்டேன்
மாற்றார்தம் மனைவியரில் வீழ்ந்தவனைக் கண்டேன்
... மனையினிலே கிடப்பவளை மறந்தவனைக் கண்டேன்
ஆற்றாத துயரத்தில் வாழ்பவரைக் கண்டேன்
... அவரவரின் கண்ணீரில் ஆயிரத்தைக் கண்டேன் !

கருத்துகள் இல்லை: