புதன், மார்ச் 30, 2016

சிந்துப்பா ( ஆனந்தக் களிப்பு )

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று  !

குறுங் கவிதை


மழையில்
நனைந்து விளையாடிய
தம்பியை
உள்ளே இழுத்து
தாழிட்டாள் அம்மா
பிடித்துவிடும் சளி என்று

நனையாமலேயே
பிடித்து விட்டது சளி
அவன்
அழுத அழுகையில் !

இயல்தரவினைக் கொச்சகக் கலிப்பா !

பற்றைப் படர்ந்திருக்கப் பால்நிலவும் பாய்விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே ஓரிரவு நாமிருவர்
ஒற்றையிலே நின்றதையே ஒட்டநின்று பார்த்தவரார்
சற்றே கசிந்துவிடச் சாதிசனங் கண்திறக்க
உற்றா ரெனைக்கேட்க ஊருசன மும்சிரிக்க
சொற்கலக மாகியதே  சொல்லாத சொல்லுமெழ
முற்று மிழந்தேனே மூச்செல்லா முன்னினைவே
பற்றோ டிருப்பவளைப் பாராயோ என்னுயிரே !

ஞாயிறு, மார்ச் 27, 2016

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !


உள்ளத்தை ஈந்துனக்( கு ) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய் ! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு  காதாய்ச்சொல்

கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு  !

வெண்பா !



கண்ணாடி முன்னின்று கண்ணுக் குமைதீட்டி
வண்ணக் கிளிபோல வந்தால்நீ  - என்னுடனே
அத்தானின் தொப்பையினால் ஆகாப் பொருத்தமடி

முத்தேநீ ! போநடந்து முன் !

நட்புகள் !



வஞ்சிப்போர் கொண்டாடும் நட்பும்  உண்டு
நஞ்சாகிப் போனபல நட்பும்  உண்டு
கொஞ்சலிலே குளிர்காயும் நட்பும் உண்டு
மஞ்சம் குளித்தணைந்த நட்பும் உண்டு
வெஞ்சினத்தால் வெந்தவிழ்ந்த நட்பும் உண்டு
நெருஞ்சியெனக் குத்துகின்ற நட்பும் உண்டு
அஞ்சலித்துப் போற்றுகின்ற நட்பும் உண்டு
அஞ்சரினா லழிந்தொழிந்த நட்பும் உண்டு
சஞ்சலத்தி லுயிர்துறந்த  நட்பும் உண்டு
நெஞ்சகத்தைத் தாலாட்டும் நட்பும் உண்டு  !

வெண்பா


பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையை - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி  அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள்  !

கட்டளைக் களிப்பா !

                                       
           அரையடி : தேமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் 



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ எம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !

சனி, மார்ச் 26, 2016

புதிர் வெண்பா


காலிருக்கும் கையில்லை கண்ணில்லை வீட்டினிலே 
காலமெலாம் நின்றிருக்கும் காவலன்யார் - காலிருந்தும் 
காலிமனை யானாலுங் காலடிமண் ஒட்டாதுக் 
காலாற லில்லாக் கதவு !

செவ்வாய், மார்ச் 22, 2016

வெண்பா

அன்னைக் குதவுதற்கோ ஆளாகிப்  போனபின்னே
தன்னைத் தரப்படுத்த ஒத்திகையோ - சின்னவள்தான்
சிற்றிடையில் செம்பணைத்துச் சின்னக் கரமசைத்துப்
பற்றோடு போகுமெழில் பார்  !

குறுங் கவிதை

என்னதான் சொன்னாலும்
திரும்பிப் போவதாக இல்லை
பின்னாலேயே வருகிறது
உன் கடைசி வார்த்தை 

அறுசீர் விருத்தம் !

விருந்தென மதுவை வார்த்து
... விளித்திடும் நட்பே வேண்டாம்
மருந்தெனச் சொன்னால் கூட
... மதுவினைத் தொடவே வேண்டாம்

அருந்திட ஆற்ற  லேற்றும்
... அகன்றிடுந் துன்ப மென்பார்
அருந்தியே ஆர்ப்ப ரித்தே
... ஆறுதல் சொல்லிக் கொள்வார்

வருந்தியே கண்ணீர்  சிந்தும்
... அருந்தியோர் சொல்வ தெல்லாம்
வருத்திடும் பிணிகள் சேர்த்து
... வாழ்வதில் சாதல் மேலாம் 

சனி, மார்ச் 19, 2016

ஹைக்கூ


எத்தனைமுறை  விரட்டினாலும்
உட்கார்ந்து செல்லத் தீராத ஆசை
ஆறாத புண்ணில் ஈ !

குறும்பா !

கல்லூரி  வாசலிலே  கூட்டம்
எல்லோரின் முகத்திலுமே வாட்டம்

  வந்திருந்த பெருபேற்றில்
  நொந்தவரே பலபேராம்

கல்லாமல் அலைந்ததனால் தேட்டம் !

வெண்கலிப்பா !

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா  லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாட
பெருகுமே புகழுலகில் 
கருகொண்டக் கவிதைகளாய்
கமழவே  நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

வெள்ளி, மார்ச் 18, 2016

குறுங்கவிதை !


நீ
இல்லாத தருணங்களில்
என்னோடு
பேசிக்கொண்டிருக்கிறது
உன் கவிதைகள்
அதே மெளனத்தில்  ....

குறும்பா !

தினந்தோறும் குடிப்பவன்தான்  முத்து
சினமேறத் தினம்பிடிக்கும் பித்து


   ராத்திரியில் வருபவனை
   ராசாத்தி அவள்மனைவி


சினத்தோடு கேட்கவிழும் குத்து  !

குறும்பா !

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே அவள்மேல்தான் ஆச

  கள்ளியவள் வருவாள் பார்
  கிள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடிக் கூந்தல்மணம் வீச !

வியாழன், மார்ச் 17, 2016

வெண்பா !

தங்கு தடையின்றித் தருவளம் யாவுமே
எங்கு மிடையூறாய் ஏனிது - பங்கமாய்
வாழும் மனிதரின் வாழ்க்கையும் மாறவே
மூழுதே அதுவென மொழி 

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடு நம் 
முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட

காணும்

இரப்போரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே !