திங்கள், ஏப்ரல் 07, 2014

எழுந்து விடு !

துணிந்திடு வாழ்வினில் துயரமில்லை
      தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும்  நிலைப்பதில்லை
      காமுக நட்பும் வளர்வதில்லை !


அணிகளாய் இணைந்திட யாருமில்லை
      ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
      தெருமுனை வரையும் வருவதில்லை !


அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
      அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
      பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !


மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
      வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
      உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !


அளந்தது உன்னை இழப்பதில்லை
      அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
      தடைவரும் முன்னே எழுந்துவிடு !!


                அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

மனிதம் மட்டும் ..

ஆற்றின் கரையினில் ஆட்டமிடும் - நாணல்
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை

காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக் 
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்

நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை

தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித் 

துரத்துவ தொன்றே என்கவலை 



  -- அஷ்பா அஷ்ரப் அலி  --

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

தீயெனச் சுடுவதெல்லாம் ...

ஆழ்கடலில் முத்தெடுக்க குளிப்போர் எல்லாம்
          ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
          எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !

சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
          சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
          உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !

சூழ்ந்து
எழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
          சோர்வடைந்து  வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
          பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !

கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
          கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
          நாரெனவே
கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !

ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
          அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
          தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !


   அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், மார்ச் 27, 2014

மேன்மையில் பிறந்த ...

நீரிடை நெளியும் புழுவும்
நிலத்தடி வாழும் எறும்பும்
தேனடை ஒழுகும் தேனின்
தேம்பலில் குளிக்கும் தேனீ

கானிடை திரியும் விலங்கும்
கடலினில் வாழும் மீனும்
ஊணினைத் தேடி உழைக்கும்
உயிர்களின் நியதி  அதுவே !

வீணென வாழ்ந்திட எதுவும்
உலகினில் பிறப்பது மில்லை
வீண்பகை கொண்டே  எந்த
உயிரினம் வாழ்வது  மில்லை

மேன்மையின் பிறப்பே மனிதன்
மாள்வது மாயையின் கனவில்
தாண்டவ மாடிடும் பகைமை
தனக்கென கொண்டவன் இவனே !


      அஷ்பா அஷ்ரப் அலி

   

புதன், மார்ச் 26, 2014

வேலி மீறிய கிளைகள் ..

வேலி மீறிய கிளைகளை
வெட்டி விடு
வெட்டாமல் விடு எனக்கென்ன

ஆடாத கிளைகள் கூட
அழுது கொண்டே இருக்கின்றன
அமைதியாக


ஆயிரம் எண்ணங்கள்
அதனதன் மனதினில்

அங்குசத்திற்கு
அடங்குமென்றால் யானை
ஆள் பலத்தால்
முடியாமலா போய்விடும் என்ன


கொஞ்சம் இரு
ஏன்
இப்படி வியர்க்கிறது உனக்கு  ?


    அஷ்பா அஷ்ரப் அலி

சனி, மார்ச் 22, 2014

துடித்தெழு !!

வாழ்கையின்  விளிம்பில்  நின்று
        வழுக்கியே  வீழும்  போது
தாழ்வினில்  கிடக்கும்  மனிதன்
       தனக்கென  கொண்ட  வாக்கில்
வாழ்வினில்  எல்லா  மிங்கு
       வருவது  பொதுவே 
வென்று
தோல்வியைத்  தனக்குத்  தானே
       தேற்றிடக்  காண்போ  மிங்கு !

வெண்பனித்  தூங்குங்  காலை
       விடியலே  கண்  திறக்க
எண்ணிலா  பறவை  எல்லாம்
       எழுந்தவர்  இரையைத்  தேட
கண்படும்  தூர  மெல்லாம்
       காரியம்  பல  விருக்க
முன்கடன்  பின்  கடன்போல்
       முடங்கியே  இவன்  கிடப்பான் !

அல்லலே  அல்லல்  என்று
       அகத்தினில்  கிடந்தா  லொன்றும்
இல்லவே  இல்லை  என்றும்
       இகத்தினில்  ஈடு  னக்கு
தொல்லைகள்  சூழும்  முன்னால்
       துடித்தெழு  வில்லாய்  வளை
எல்லையே  அற்ற  இன்பம்
       இனியுனக்  கென்றே  உணர்  !!


    அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், மார்ச் 20, 2014

நீ அறிவாயோ !!

கடற்கரை மணலில் காலாற  -  சற்று
     களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம்  - நொடிப்
     பொழுதினில்  மாறுவ  தறிவாயோ

விடலைகள் காணும் கனவெல்லாம்  -  வெறும்
     ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில்  - இங்கு
     கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ

படலையின் கண்ணில் பாவையர்கள்  - வெறும்
     பார்வையி  னாலே  பசியாற
இடர்துடைத்  தவரின்  கைகோர்க்க  - நம்
     மிளைஞரிங் கில்லை அறிவாயோ

ஆடவர் அன்பினில் தாரமதும்  -  அவள்
     அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி  -  வாழ்வை
     தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ

தடமெனப் பதிந்த துயரெல்லாம்  - தம்
     தலையினில் கிடந்து  சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
     வணங்கிட நிம்மதி அறிவாயோ


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

புதன், மார்ச் 19, 2014

பிடித்திருந்தால் சொல்லு ..

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய்  என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன்  உன்னை

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு  -  தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து




பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம்  போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு  - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...

-- அஷ்பா அஷ்ரப் அலி --

செவ்வாய், மார்ச் 11, 2014

எப்பக்கம் திரும்புவது ?

அகிலத்தின் அதிபதியே உன்னை அன்றி 
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு 
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய் 

வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு 
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி 
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத் 
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய் 

வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு 
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி 
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும் 
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால் 

வாதாடி வாதாடி வாசல் தோறும் 
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால் 
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும் 
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...

அஷ்பா அஷ்ரப் அலி

ஞாயிறு, மார்ச் 02, 2014

மூக்குத்தி ( குறும்பா )

கண்ணுக்குள்ளே  கிடப்பவளே  ராசாத்தி
கன்னத்திலே  குத்துதென்றேன்  மூக்குத்தி

     கனன்றுவந்த  வேளையிலும்
     கழற்றிவைத்தாள்  மின்னலென

கிண்ணத்திலே  மூக்குத்தியை  வெட்கத்தில் !




                     அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, பிப்ரவரி 28, 2014

பொன்னழகு பூத்திருப்பாள் !!

நித்திலத்தின்  நிறைவாழ்வோ  நேசத்தின்  நிறைகுடமோ
     சித்திரமாய்  சிலைவடிவாய்  செங்கமலக்  காரிகையாள்
உத்திகொண்டு  போராடிப் 
பொற்கொடியின்  கைகோர்க்க
    
மெத்தவுந்தான்  பாடெனக்கு  முத்திவிடும்  பித்தெனெக்கு ..


சிற்றிடையோ  சிறுகொடியோ  சிணுசிணுத்த  செந்தேகம்
     செங்கனியின்  செழிப்பினிலே செவ்வானம் 
செயலிழக்கும்
பொ
ற்கிளியின்  பூவிதழில்  பூவாடை  புன்னகைக்கும்
      பொலிவென்றால்  பொலிவதுவே  பொன்னழகு  பூத்திருக்கும் ..


இத்தளத்தில்  இவள்போல  இன்னொருத்தி கிடைப்பாளோ
     இல்லாளாய்  என்னுள்ளம்  இனியொருபெண்  இணைவாளோ
சுத்தமுள்ள  எண்ணமுண்டு  சத்தியத்தில்  வாழ்வுமுண்டு
     சேர்த்துவிடப்  பெரியோரே  சார்ந்திடுவீர்  என்கூட  ..



            அஷ்பா  அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 27, 2014

கண்கெட்டுக் கிடக்குதடா !!

கண்கெட்டு  கிடக்குதடா  உலகம்  -  காணும்
களமெல்லாம்  நடக்குதடா  கலகம்
கால்பட்ட  இடமெல்லாம்  குருதி  -  இனக்
கோளாறு  இருக்கும்வரை   உறுதி  ..

உள்ளோர்க்கு  ஒன்றிங்கு  சட்டம்  -  உயர்
வில்லார்க்கு  கிடைக்குதிங்கு  பட்டம்
எல்லோர்க்கும்  இரத்தநிறம்  சிவப்பு  -  அதை
எண்ணாதோர்  மனதிலேனோ  கசப்பு  ..

கண்கெட்ட  விலைவாசி  உயர்வால் -  மக்கள்
கண்ணீரை 
அணைத்திங்கே  அயர்வார்
புண்ணாகிப்  போனோரும்  உண்டு  -  தினம்
புழுதிவாரிப்  போட்டோரும்  உண்டு ..

ஆகாது  என்றாலும்  தேகம்  -  தினம்
காணாது  என்றலறும்  போகம்
வேகாது  வாழ்வோர்க்கும்  ஆசை  -  வெந்து
வேக்காடு 
ஆனோர்க்கும்  ஆசை ...

     அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

அன்றலர்ந்த தாமரையோ நீ !!

அன்றலர்ந்த  தாமரையோ  -  அன்றி
     அணிலளைந்த  செங்கனியோ
கன்றிழந்த  காளையைபோல்  -  எதைநீ
     கண்சுழற்றி  தேடுகிறாய்  !

வண்டினங்கள்  வாசல்வழி   -  தினமும்
     வந்துவந்து  போகுதடி
பண்பிழந்து  போகுமென்றால்  -  மனசு
    
புண்தொடுத்து  வேகுமடி  !

காலமுன்னைக் 
கொல்லுதென்றால்  -  நீ
     கண்ணசைத்து  சொல்லுபுள்ள
ஆதவனைப்  போலயிங்கு  -  நானும்
     காத்திருக்கேன்  ஊருக்குள்ளே   !!


          அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 20, 2014

அழ வைத்த கண் கொண்டாள் ..

ஆழத்தில்  கிடந்தாலும்  அன்பே   நீயும்
     ஆற்றாத 
துயரந்தான்  எந்தன்  நெஞ்சில்
மீளத்தான்  முடியாதோ  மீண்டும்  மீண்டும்
     முள்ளாகிக்  குத்துகிறாய்  நெஞ்சில்  எங்கும்

காலத்தா  லழியாத  காதல்  என்றன்
     வேல்போலுன்  உள்ளத்தில்  பாய்ந்த  தாலோ
மாளத்தான்  வீழ்ந்தேனோ  உந்தன்  கண்ணில்
     விளக்கித்தான்  சொல்வாயோ  விபரம்  கூட்டி

கோணத்தில்  உன்னெண்ணம்  குறுக்கா  லோட
     கொதிக்கின்ற  என்னெண்ணம்  தவிக்கு  திங்கே
வானத்தின்  உயரத்தில்  வாழ்ந்தால்  நீயும்
     வாகாக  வாழ்வாய்நீ  என்னில்  என்றும்

தேனாக  சொட்டுகின்ற  பெண்கள்  கண்ணில்
     தேள்போலக்  கொட்டுகின்ற  கண்கள்  உண்டோ
ஆணாகப்  பிறந்தோர்க்கு  அல்லல்   தந்து
      அழவைத்த  கண்களில்நீ  நூற்றில்  ஒன்றோ  ?



                         அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

விழுந்தாலும் மகிழ்வேன் !!

விதிவந்து  விளையாடி
  விழும்போதும்   மகிழ்வேன்
சதிமாந்தர்  செய்தெனக்கு
  சரிந்தாலும்   மகிழ்வேன்

ஊரெல்லாம்  சேர்ந்தென்னை
  பகைத்தாலும்  மகிழ்வேன்
பாரெல்லாம்  சேர்ந்தென்னை
  வதைத்தாலும்  மகிழ்வேன்

கொடியோர்கள் கூடியென்னை
  கடிந்தாலும்  மகிழ்வேன்
அடியோடு  உறவெல்லாம்
  வெறுத்தாலும்  மகிழ்வேன்

குளிர்காற்று  வந்தென்னை
   தொட்டாலும்  மகிழ்வேன்
கடும் வெயில்வந்து  தீயாக
   சுட்டாலும்  மகிழ்வேன்

ஆவியெந்தன்  மேனியிலே
  இருந்தாலும்  மகிழ்வேன்
சாவுயென்னைத் தேடிவந்து
  அழைத்தாலும்  மகிழ்வேன் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, பிப்ரவரி 15, 2014

எப்பக்கம் திரும்புவது ?

எங்கென்று   நோக்குவது
எதையெதைநான்   நோக்குவது ?
எப்பக்கம்   திரும்பினாலும்
ஏராளச்  சிக்கல்கள்  ..

வாதாட   வாய்கொண்டோர்
வாய்கிழிய   கத்துவதும்
ஆதாரம்   தேடித்தேடி
ஆடிடுவோர்   ஒருபக்கம் ..

சூதாட்டம்   மதுமங்கை
சொல்லாலே   வெறுத்தொதுக்கி
வேதாளம்   போல்வாழ்வோர்
வீதியெங்கும்   ஒருபக்கம்  ..

எண்ணத்தில்  
ஒன்றுவைத்து
எழிலோடு   புன்னகைத்து
வன்மனமாய்   வாழ்ந்திடுவோர்
வாசலெங்கும்   ஒருபக்கம் ..

எண்ணற்ற   வாக்குறுதி
எத்தனையோ   அள்ளிவீசி
கண்கெட்ட  அரசியலில்
கால்வைத்தோர்   ஒருபக்கம்  ..

நிந்திப்போர்   உள்ளவரை
எந்தவிதப்   பயனுமில்லை
வந்துவந்து   போகுமிந்த
சிந்தனையோ   ஒருபக்கம் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், பிப்ரவரி 13, 2014

வற்றா நதியென நீயுண்டு !!

வானும்  கடலும்  நமக்கென்றால்  -  என்
     வற்றா  நதியென  நீயிருக்க
காணும்  காட்சி  பலவிருந்தும்  -  நான்
     கண்டே  மகிழ்ந்திட  நீயாகி
தேனும்  பாலுஞ்  சுவைகொண்டு  - தினம்
     சேர்ந்தே  மகிழ்ந்திட  நீயுண்டு !


ஆற்றாத்  துயரம்  எனில்காண  - எனை
     தேற்றித்  தழுவிட  எனக்கென்றும்
காற்றாய்  மழையாய்  வகைகொண்டு  - என்
     காலம்  கனிந்திட  தினமென்றும்
ஊற்றாய்  பெருகிடும்  உணர் (வு ) கண்டு  - தினம்
     உவகை  பொங்கிட  நீயுண்டு !


காதல்  கீதம்  பல உண்டு  - அதை
     காதில்  இசைத்திட  நீயுண்டு
தோதாய்  உன்னில்  எனைகொண்டு  -  நான்
     தாழா  திருக்க  நீயுண்டு
 
சாதல்  எவர்க்கும்  பொதுவுண்டு  -  என்
     சாகா  வரமாய்   நீயுண்டு !


                அஷ்பா அஷ்ரப் அலி

       

புதன், பிப்ரவரி 12, 2014

ஆட்டம் போடும் மனிதன் !!

தேனருந்தும்  வண்டினமோ  மலர்களோடு  கொஞ்சும்
    தேனிழக்கும்  நிலையறிந்து  மலர்களதும்  கெஞ்சும் !

கானகத்து  நடுவில்நின்று  கோலமயில்  ஆடும்
     கண்டதனில்  களிப்புற்று  கானக்குயில்   பாடும் !


ஊனமுற்றோர்  உலகெங்கும்  குமுறிமனம்  துடிப்பார்
     உதவிடநல்  கரங்கொண்டோர்   வேதம்தினம்  படிப்பார் !

மானமதை  இழந்தவராய்  மாக்களவர்  கூட்டம்
     மமதையுடன்  போடுகின்றார்  மண்ணிலிங்கு  ஆட்டம் !

வேரறுந்த  உறவுகளே  ஊர்நிறைந்து  வாழும்
     பார்தொடுத்த  போரினைப்போல்  உறவுமுறை  சூழும் !

தாரமதை  தள்ளிவைத்து  தனதின்பம்  சேர்ப்பார்
     தள்ளாடும்  நிலைவரவே  தாரம்கரம்   கோர்ப்பார் !


  அஷ்பா அஷ்ரப் அலி 

திங்கள், பிப்ரவரி 10, 2014

வையம் எங்கும் அமைதி இல்லை !!

வானில்  தேய்ந்த  இளநிலவும்  -  அதன்
   வடிவம்  வளர  அமைதிபெறும்
தேனில்  அளையும்  வண்டினமும்  - தன்
   தேவைக்  கேற்ப  தேனுறிஞ்சும்
வீணில்  அலையும்  மனிதமனம்  - ஏனோ
   விருப்பம்  நிறைந்தும்  ஓய்வதில்லை !


விளங்கா  வாழ்வில்  வாழுமவன்  -  தினம்
   வீணாய்  வாழ்வைக்  கழிக்கின்றான்
விளக்கின்  ஒளியில்  வந்துவிழும்  -  அவ்
   விட்டில்  போலச்  சுருளுகின்றான்
கலங்கித்  தவிக்கும்  கண்கண்டும்  -  அவன்
   காணா  திருந்தே   மாளுகின்றான் !


பகுக்கும்  அறிவு  கொண்டோனாய்  - பாரில்
   பரமன்  படைத்த  மனிதஇனம்
ஆகும்  கலகக்  கும்பல்களால்  -  தினம்
   அழிந்தே  மடியுது  அனுதினமும்
வகுப்பென  வாழும்  இழிநிலையில்  -  இந்த
   வையம்  எங்கும்   அமைதிஇல்லை  !!


     அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

விளக்கேற்ற வந்து விடு !!

ஆழ்கடலில்  ஆழ்ந்தெடுத்த  முத்துக்  கண்ணில்
         அஞ்சனங்கள்  சூழ்ந்துநின்ற  அழகைக்  கண்டேன்
மூழ்கிடத்தான்  பாவிமனம்  அங்கங்  கண்டு
          முழுநிலவாய்  வதனமதும்  ஒளிரக்  கண்டேன்  !


கார்குழல்போல்  கருங்கூந்தல்  களைந்து   ஆட
         கன்னியவள்  கால்களதோ  நடையும்   பயில
வார்த்தெடுத்த  சிலையதுபோல்  வனப்பில்  மின்னும்
         வஞ்சியவள்  கன்னத்தின்  குழியும்  பேசும்  !


மங்கையவள்  கொங்கையதும்  மலரக்  கண்ணில்
           மதிமயங்கி  மடல்திறக்கும்  மாயக்  கனவும்
தங்கமென  வார்த்தெடுத்த  தளிரும்  மேனி
            தடையகற்றி  தழுவிடவே  எண்ணம் தோன்றும் !


பூவிதழில்  பூத்துநின்ற  புன்னகையோ  அன்றி
            புதுநாதம்  பிறக்கின்ற  பூங்  குழலோ
ஆவியெந்தன்  பிரிந்தாலும்  அழகுக்  கிளியின்
             அமுதவிதழ்  அவிழ்த்துவிடத்  தானே  ஏக்கம்  !


வேல்விழியாள்  விளக்கேற்ற  வந்தால்  என்றன்
               வாழ்வினிலும்  வாசலிலும்  சுடராய்  ஒளிரும்
பால்பொழியும் 
வதனமவள்  பார்த்துப்   பார்த்தே
                பசியாறிப்  போவதுண்மை  விடியல்  தோறும்  !!



                       அஷ்பா அஷ்ரப் அலி 

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

அண்டியே வாழ்வோம் என்றும் !!

மண்டலம்  வாழ்வோ  ரெல்லாம்
  முண்டமாய்  ஆன  தால்தான்
கண்படும்  தூர  மெல்லாம்
  வன்முறை  துளிர்த்த  தெங்கும் !

அண்டமே  சூழ்ந்து  நின்ற
  அமைதியின்  வாடை  நீங்கி
பண்டைய  இனிமை  இன்றி
  புண்படும்  வாழ்வு  கண்டோம் !

கண்டனக்  குரல்  கொடுப்போர்
  தண்டமே  என  வளைந்து
மண்ணினில்  குவிந்த  தால்தான்
  மகிழ்வினை  இழந்து  விட்டோம் !

மாண்டிடச்  செய்வோம்  அந்த
  மானுடம்  வெறுக்கும்  தொல்லை
அண்டியே  வாழ்வோம்  எங்கும்
  அன்பெனும்  கரங்கள்  கோர்த்து !


         அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இறைவனைப் புகழ்வாய் !!

வற்றா  நதியென   வளமளித்து
வாழும்  உயிருக்  குணவளிக்கும்
ஏற்றங்  கொண்ட  இறையோனை
என்றும்  துதிப்போர்  இங்கில்லை  !

போற்றா   திருப்போர்  ஒருபாதி
பொல்லா  துள்ளம்   மறுபாதி
ஏற்றத்  தாழ்வு   என்றி ன்றி
ஏந்திடும்  அவனை  நினைப்பதில்லை  !

ஆற்றாத்  துயரம்  சூழ்கையிலே
ஆயிர  மாயிரம்  அவ (ன் )
னினைவு
ஆற்றலில்  அவனின்  வல்லமையை
ஆழ்ந்தே  நோக்கிடக்  கண்களில்லை  !

வேற்றுமை  அகற்றி  உயிர்கட்கு
வேண்டுவ  தெல்லாம்  அளிப்பவனே
ஆற்றல்  கொண்ட  உன்னன்பால்
அளக்கும்  படியிலும்  குறைவில்லை  !

காற்றால்  மழையால் 
கதிரொளியால்
காலச்   சுழற்சியில்  எமைகாக்கும்
ஏற்றம்  பெற்ற   உனையன்றி
ஏகன்  வேறு   எமக்கில்லை  !!


       அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, ஜனவரி 31, 2014

யார் தடுத்தது ?

வானிலோடும் வெண்ணிலவை யாரழைத்தது - அது
வேதனையால் ஏனதனின் முகம் மறைத்தது
'தேனிலவு ' என்றழைத்து மாந்தர்களிப்பதால் - அது
தன்பெயரை தரக்குறைவு என்று நினைத்ததோ !

தென்றலதை தொட்டுப்பார்க்க யார்முனைந்தது - அது
தரித்திடாமல் அங்குமிங்கும் அலைந்து ஓடுது
தழுவுகின்ற மேனியெங்கும் பயந்து உரசுது - இந்த
தரணியிலே மனிதரென்றால் அஞ்சி யொடுங்குது !

கடல்நீரில் கைநனைத்து கலகம் செய்ததார் - அது
கரைபுரளும் அலைகளிடம் சொல்லி யழுதது
அடங்கிடாத அலைகள்கூட சீற்றங்கொள்ளுது - தன்
ஆத்திரத்தை அள்ளிவீச தருணம் பார்க்குது !

வாடுகின்ற உள்ளங்களை நீ மறப்பதால் - உனை
வாழவைக்கும் இதயங்கூட கோபங் கொள்ளுது
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் காணுமிதயமும் - அது
ஓடுகின்ற செயல்நிறுத்தி உன்னைக் கொல்லுது !!

அஷ்பா அஷ்ரப் அலி

புதன், ஜனவரி 29, 2014

வெள்ளையுள்ளம் இல்லை எங்கும்.....

உள்ளங்கள்   அனைத்திலுமே
உதிரமது   சிவப்பு
உதவிடவே   கைகளென
உணர்வதில்லை   மனது ..

வெள்ளையுள்ளம்   உள்ளவராய்
வாழ்வதென   நினைப்பு
கள்ளமுற்ற  
நெஞ்சிலெங்கும்
கருமைநிறப்  பொலிவு  ..

கொள்கையெனும்  பெயரினிலே
குறுகுறுத்த  போக்கு
கொஞ்சமேனும்  குறைவதில்லை
கொடுஞ்சொல்லின்   வீச்சு  ...


    அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, ஜனவரி 24, 2014

கண்களைக் கண்டெழுது ..

கருவிழி  கொண்ட  கண்களினை -  தினம்
     கவிதையில்  நனைத்தே  மகிழ்கின்றீர்
இருவிழி  இழந்தோர்  இருவரியில் -  ஏன்
     எழுதிடக்  கைகளை  தடுக்கின்றீர் !

கண்களின் 
மேலழ  கறிந்திடும்நீர்  -  அது
     கசிந்திடும்  கண்ணீர்  கண்டிடுவீர்
வெண்காசக்  கண்கள்  பலவுண்டு  -  அது
    வினைகளில்  வீழ்வதை  உரைத்திடுவீர் !

பெண்களைப்  போற்றிட  பொழுதெல்லாம் - அவள்
      கண்களை  மான்விழி  என்கின்றீர்
தன்விழி  இழந்தவர்  கண்பேசும்  -  அத்
    துயர்கதை  கேட்டிட  மறுக்கின்றீர் !

அணங்கினர்  கண்களில்  அழகுண்டு  -  நம்
       ஆடவர்  கண்களில்  பொருளுண்டு
இணங்கிட  வைத்திடும் வாலிபரின்  -  நல்
        இணர்கண்  போற்றியும்  எழுதிடுவீர் !!


         அஷ்பா அஷ்ரப் அலி ..

செவ்வாய், ஜனவரி 21, 2014

யாரும் இல்லை !!

கண்ணோடு  கண்காணும்  காத  லெல்லாம்
கையோடு  கைகோர்த்து  இணைவ  தில்லை
பண்ணோடு  பெயர்பெற்ற 
மாந்த  ரெல்லாம்
புண்னிதயம்  இல்லாமல்  மரித்த  தில்லை

விண்ணோடு  மண்ணெங்கும்  வீசுங்  காற்று
வீணாக  ஓய்வென்று  படுத்த  தில்லை
மண்ணோடு 
மண்சேர்ந்த  உறவினர்  தன்
மண்வாழும்  உறவுகளோ  நினைப்ப தில்லை

வண்டோடு  அணைகின்ற பூக்கள்  ஒன்றும்
ஒருபோதும்  பூவின்மணம்  இழப்ப  தில்லை
கண்கூடாய்  கண்ணெதிரே  கண்ட
உண்மை
கசப்பென்று  வாய்ஏனோ  திறப்ப  தில்லை

அதிகாரம்  கொண்டிங்கு  அரசாள்  வோரும்
தள்ளாடும்  மக்கள்நிலை  பார்ப்ப  தில்லை
விதியென்று  வாழ்வினையே   நொந்  திட்டோரும்
விடியலதன்  புன்சிரிப்பைக்  கண்ட  தில்லை

சதிகாரக்  கூட்டங்கள்  போடும்  ஆட்டம்
அதிகாரம்  உள்ளோரும்  காண்ப  தில்லை
நதியெனவே  பெருக்கெடுத்த  நலிந்தோர்  கண்டு
நானிலத்தில்  நலமளிக்க  பிறந்தோ   ரில்லை ..



      அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, ஜனவரி 18, 2014

மனையினைக் காப்பாள் !

  மனையினை  காத்திடும்  மனைவியவள் -  நல்
  மாண்பினை  தினமும்  போற்றுங்கடா !
  மனையினில்   தீபச்  சுடரொளியாய் -  புது
  மங்கலம்  நிறைவதைப்  பாருங்கடா !

  துணையெனக்  கண்டவள்  துன்பமெலாம் -  உன்
  தோளினில்  கிடப்பவள்  காட்சியடா !
  அணைத்திட  மட்டுமா  அவளுனக்கு -  இல்லை
  அனைத்திலும்  உனக்கே 
சொந்தமடா !

  தன்னையே  தந்தவள்  தரணியிலே -  தரம்
  தாழ்ந்திட  வாய்ப்பே  இல்லையடா !
  பண்புடன்  வாழ்பவள்  நெஞ்சத்திலே -  புது
  பொலிவுடன்  கிடந்தே  வாழுங்கடா !

  தன்னிக  ரற்ற  அன்பிலவள்  -  தினம்
  தளும்பிடும்  இதயத்தை  பாருங்கடா !
  இன்முகத்  தாலவள்  கைகோர்த்து  -  என்றும்
  இன்பக்  கடலில் 
மூழ்குங்கடா  !


      அஷ்பா அஷ்ரப் அலி 

கண்ணிலே என்ன உண்டு ..


வாழ்வதில் சாதல் மேன்மை !!


புதன், ஜனவரி 15, 2014

குறும் பா !

ஆத்தாடி  அவள்மேல  ஆச
ஆளாளுக் 
கொன்றொன்று  பேச !
         கள்ளியவள்  நடந்துவந்தாள்
          கிள்ளிய  அம்மல்லிகைப்பூ
கூத்தாடி  கொண்டையிலே  மணம் வீச !


     அஷ்பா அஷ்ரப் அலி 

பாவெழுத துணிந்து விட்டேன் !!

பண்ணெடுத்து  பாவெழுதும்  பாவலரைக்  கேட்டு
பாவெழுதி  பழகிடவே  பலநாட்கள்  கேட்டும்
பண்பாடே  இல்லாது  பகிடியுடன்   பதிலளிப்பார்
பாலைவனப்  பூவுனக்கு  பாவொரு  கேடாவென்று

பள்ளியிலே  நல்லதமிழ்  படித்ததில்லை இலக்கணமாய்
கள்ளியெனக்  குத்தியது  கவி
ரவர்  அகம்பாவம்
அள்ளியெனை  அரவணைத்த  அழகுதமிழ்  நூல்களினால்
துல்லியமா  யில்லைதான்  துரும்பேனும்  கற்றறிந்தேன்


சிற்றெறும்பாய்  சிறுகவிதை  சிந்தனையில்  கிறுக்குவதை
சிறப்பென்று  முகநூலில்  சிலிர்க்கின்ற  நட்புகளால்
நாற்றெனவே  நடுகையிலே  நாளொன்றாய்  வளர்ந்திடவோர்
நல்வாய்ப்பு  வருவதுபோல்  நாளெனக்கு  விடிகிறது


கற்றறிந்த  கவிஞரவர்  கற்றெனக்குத்  தந்திருந்தால்
கவிதையெனும்  வயலினிலே  காலாற  நடந்திருப்பேன்
ஏற்றமிகு  நாமமவர்  என்நாமத்தில்  இணைத்திருப்பேன்
ஆற்றாத  கவலைதான்  அவரின்றோ  நம்மிலில்லை



       அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, ஜனவரி 11, 2014

நெட்டி விடும் விரலால் சொல்லு !

வெட்ட  வெளி  வானிலெங்கும்
வட்டமிடும்  வெண்ணிலவாய்
திட்டமிட்டு  விழிகளினால்
சுட்டு  எனை நோக்குவதேன்

கட்டழகு  கவிதை சொல்லி
காட்டுதடி  புன்னகையாய்
மொட்டு  விடும்  புன்னகையை
எட்டி  நின்று  வீசுவதேன் 

தொட்டுவிட துடிக்கு ( ம் ) மனம்
தட்டுப்  பட்டு  விழுகுதடி
கிட்ட  வந்து  நின்றுயென்னை
தட்டிக் கொஞ்சம் பார்த்து விடு

அட்டையை  போல்  ஒட்டிக்கொள்ள
இட்டம்  எனும்  இதயத்திற்கு
நெட்டி  விடும் விரலை கொஞ்சம்
நீட்டி ஒரு பதிலைச் சொல்லு ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

அறஞ் செய்வோர் வேண்டும் !

ஆளில்லா  உலகமென அருவருப்பில் மூழ்குபவர்
  அடையாளம்  கண்டவரை  கருவறுக்க  வேண்டும்
நாளினிதாய்  நகர்ந்திடநல் 
அறங்கலெனச்  செய்து
  நலம்மிகு  நாளிகைகள்  நமையிழக்க  வேண்டும்
வேலிகளுள் 
விழுந்தழுகும்  விழுதுகளாய்  ஏழ்மைப்
  பெண்களுக்கு  வாழ்வளிக்கும்  இளைஞரிங்கு  வேண்டும்
போலிகளாய்  வேசமிடும்  பெயர்தாங்கித்  தலைவர்
  பரம்பரையைத்  துரத்திடவோர்  இளைஞரணி  வேண்டும் !


நாளெல்லாம்  நலிவுருவோர்  நலம்வேண்டி  இங்கு
 நல்லெண்ணம்  கொண்டோர்கள்  பிறப்பெடுக்க  வேண்டும்
நாளவையில்  நாவினிக்க  நல்வாக்கு  கூறி
  நாணயத்தை 
இழந்தவரை  நாருரிக்க  வேண்டும்
களப்படி  அளக்காத  களவாணி  முதலாளி
  கண்கலங்கும் தொழிலாளி  கண்துடைக்க  வேண்டும்
உளப்பாடு  கொண்டோரை  உள்வாங்கி  மனதில்
  உவகையுடன்  வாழவழி  காட்டிடுவோர்  வேண்டும் !


         அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, ஜனவரி 05, 2014

கிராமத்துக் கிளி ..

தாமரை  போலொரு முகத்துடையாள்  -  சிறி
    தாகவே  புன்னகை  பூத்துநின்றாள்
தாமத மின்றியே  ஆவலினால்  -  உனை
    தாவென்  னிதயத்தில்  எனக்கேட்டேன் !


சாமத்தில்  தொற்றிடும்  பித்துனக்கு  -  எனை
    சம்பந்தம்  செய்தவன்  உண்டெனக்கு
காமத்துக்  கிணங்கிட  வாசொன்னாய்  -  நான்
    கிராமத்துக்  கிளியடா   என்றாளவள் !



             அஷ்பா அஷ்ரப் அலி  
  

சனி, ஜனவரி 04, 2014

நிரந்தரம் ..

நிரந்தரமற்ற உலகில்
நீதானே
எனக்கு நிரந்தரம்

நின்று பேச நேரமில்லை

கொஞ்சம் அருகில் வா
என்னை
நிரந்தரமில்லாதவன் என
உலகம் சொல்வதற்குள்

  .. அஷ்பா அஷ்ரப் அலி 
..

செவ்வாய், டிசம்பர் 31, 2013

காற்றே நில் !!

வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் இல்லை உணர்வாயோ

பையில் இட்டு வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்

பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் இட்டும் நின்றிடுவாய்

மெய்தான் உலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !


எங்கும் எதிலும் உன்ஓட்டம்
தொங்கிக் கொண்டே துள்ளுதடி

அங்கம் அசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்

வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி


சங்கம் வைத்தோ சதிசெய்தாய் 
புங்கக் காற்றே பதில்சொல்லு !!

அஷ்பா அஷ்ரப் அலி

சொல்லாத எண்ணங்கள் ..

நெளிந்தோடும் நதியாக கண் பேசுது - அதை
 வழிந்தோடும் கண்ணீரும் கதை கேட்குது

விளையாடி மகிழ்கின்ற சிறு குழந்தையாய் - என்
 களையாத கனவெல்லாம் நடை பழகுது

மலைபோல பாரங்கள் தலை ஏறுது - புது
 மாப்பிள்ளை போலெந்தன் மனம் மாறுது

சொல்லாத எண்ணங்கள்  பறி போகுமோ - அது
 சில நேரம் என்னோடு குடியேறுமோ

அடையாளம் தெரியாத முகம் கண்டதால் - மனம்
 படைபோல எனைசூழ்ந்து உயிர் வாங்குது


        அஷ்பா அஷ்ரப் அலி 

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

பதின் பருவம் ...

பருவமது படருகின்ற
 பதின் பருவக் காலம்
அரும்பாகி  துளிர்த்து எழும்
 இளமையதன் கோலம்

நெருடுகின்ற நினைவெங்கும்
 நடமாடும்  ஆசை
வெறுமையுடன் அசைந்தாடும்
 இச்சைகளில் மூழ்கி

சுருக்குவழி சென்றடைந்து
 சுருக்கிட்டு மாண்டோர்
கறுக்களிலே கருவுற்று
 கதறிநிதம் நிற்போர்

அறுந்தாடிப் பறக்கின்ற
 பட்டம்போல் இங்கு
தெருவெங்கும் நிறைந்தாளும்
 காட்சிகளே அதிகம் ...


     அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, டிசம்பர் 28, 2013

புகையென கிளம்பும் பகை ...

வகையென மாந்தர் வாழ்ந்திடும் உலகில்
 வருத்திடும் இதயம் விளைந்தவர் ஒதுக்கி
புகையென கிளம்பும் பகைமையை உடைப்போம்
 பாரினில் நிலவும் பாதகம் களைய ..

மதமெனும் பெயரில் மறை முகமாக
 மதவெறி கொள்வோர் பதரென ஒதுக்க
இதயங்கள் எல்லாம் இன்முகம் காட்டி
 மதநல் இணக்கம் மகிழ்வுடன் பூக்கும் ..!


        அஷ்பா அஷ்ரப் அலி 

வியாழன், டிசம்பர் 26, 2013

புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!

கரு நீளக் கூந்தலிலே
கடைக் கூந்தல் நீயிணைக்க
என் கையாலே
முடிந்திடவா - உன்

பூவிதழில் சிந்துகின்ற
புன்னகையாய் நானமர்ந்து
புது மொழியொன்று பேசிடவா - அந்த

மருதாணிக் கையளைந்த
நெளிந்தாடும் விரல் இழுத்து
என் எச்சில் தெளித்திடவா - தினம்

சரிந்து விழும்  உன்  முந்தானை
சரியாகக் கணக்கிட்டு
சரி பாதி பிரித்திடவா - உன்

வெண்சங்கு கழுத்தளவில்
பொன்மாலை ஆகினானும்
புழு போல நெளிந்திடவா - இல்லை

பூ மாலை போன்ற உன்னை
புது மஞ்சத்தில் போட்டுவைத்து
புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

வியாழன், டிசம்பர் 19, 2013

மதங்களின் மீதும் மதம்

வேதங்கள் சொல்லும்
போதனை எல்லாம்
வேதனை புரிவது
தீதது என்றே

வேதம் ஓதிடும்
போதகர் எங்கும்
பாதகம் புரிவதை
பார்த்ததும் உண்டோ

உத்தம புத்தன்
சத்தமாய் சொன்னான்
சித்தமாய் அன்பே
சுத்தம் என்று

சாத்தனை மறந்த
புத்திரர் சிலரோ
உத்திகள் பண்ணும்
சாத்தான் ஆனார்

மதங்களின் மீது
மதம் பிடித்தாடும்
போதகர் எவரும்
போதன் இல்லை ..

அஷ்பா அஷ்ரப் அலி

செவ்வாய், டிசம்பர் 17, 2013

என் தளம் ( புத்தளம் )

மண்ணுக் கேற்ற  வளமுண்டு
 மனதுக் கினிய மக்களுண்டு
எண்ணில் அறிவில் சான்றோரும்
 ஏற்றம் பெற்றோர் இங்குண்டு ..

வந்தோர் வருவோர் வரவேற்று
 வாழ்வை அளிக்கும் மனங்கொண்டோர்
சிந்தும் கண்ணீர் கண்டாலே
 சிறப்பாய் ஈவோர் இங்குண்டு ..

வண்ணக் கலைகள் அறிந்தோரும்
 வளையா நெஞ்சம் கொண்டோரும்
பொன்னுக் கிணையாய் மனங்கொண்டும்
 மின்னும் மாந்தர் இங்குண்டு ..

தளங்கள் அறியா மனிதருண்டு
 ( புத் ) தளத்தை அறியா
தாருண்டோ
தளத்தில் தளமாய் நிலைகொண்ட
 தர்க்கம் நிறைய இங்குண்டு ..

இளைஞர் இங்கே ஒன்றிணைந்து
 இழந்த வனப்பு வரவேண்டும்
வளங்கள் கண்டே வசைபாடும்
 வாய்கள் மூடி அழவேண்டும் ...

   அஷ்பா அஷ்ரப் அலி 

சனி, டிசம்பர் 14, 2013

மதுரமரக் கிளையினிலே ..

மாலையிளம் ஒளியினிலே அவளைக் கண்டேன்
 மதுரமரக் கிளைகிளிபோல் பேசக் கண்டேன்
வாழையதன் வனப்பதுபோல் வடிவம் கண்டேன்
 வெதும்பியயென் மனதினிலே ஒளிர்வைக் கண்டேன் ..

சாலையெங்கும் காணுகின்ற கிளிகள் கண்டு
 வெதும்பாத வள்ளிதயம் எனக்கு உண்டு
சோலைக்கிளி பார்வையவள் பட்ட அன்று
 மெதுமெதுவாய் துடிப்பதேனோ இதயம் இன்று ..

மாலைக்கிளி அவளழகில் மயங்கி நின்றேன்
 பதுமையவள் புதுமையிலே வியந்து நின்றேன்
நாளையொரு நாள்வரட்டும் எனக்கே என்று
 இதங்கொடுத்து மனதினைனான் தேற்றிக் கொண்டேன் ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

வெள்ளி, டிசம்பர் 13, 2013

மடிக் கணணி !!

வெண்மையதோ கருமையதோ நிறத்திலில்லை பேதம்
    வண்ணங்களில் வடிவுகளில் வருகுதடி வாதம்

பெண்களென ஆண்களென பொழுதெங்கும் உன்னை
     மென்மையுடன் கையாளும் வகையினிலே மேன்மை

நிலைகுலைந்து வீழ்ந்தவர்கள் உன்மேலே பலபேர்
      தலைவிரித்து ஆடுதடி தரையெங்கும் உன்பேர்

வலைகொண்டு வளைத்திடவா விலைகொண்டு நின்றாய்
       வலைத்தளத்தில் விளையாடி களைத்திடவே செய்தாய்

விண்ணுயரப் போறவளே இணையமெனும் தளத்தில்
       கண்ணெதிரே கிடந்தபடி கண்சிமிட்டும் காட்சி

கண்ணயரும் வேளையிலும் கன்னியுன்னை திறக்க
        எண்ணமடி ஏனெமக்கு இப்படியோர் தொல்லை

கடிகார முள்ளோடும் காலடியின் ஓசை
        இடிகூட விழுந்தாலும் தெரியாதுன் ஆசை

பிடிவாதம் இல்லாமல் மடியினிலே கிடத்தி
        மடிக் கனனியுனை தாலாட்ட எல்லோர்க்குமாசை ...

     
            * அஷ்பா அஷ்ரப் அலி  *

புதன், டிசம்பர் 11, 2013

இன்னொரு பெண் எதற்கு ?

அஞ்சனங்கள்
சூழ்ந்த உந்தன் விழியில்
நெஞ்சம் ஏனோ
வீழ்ந்ததடி சதியில் ..

பஞ்சம் இல்லா
அழகிலுந்தன் ஒளிர்வில்
சஞ்சலங்கள்
நிறையுதடி நினைவில் ..

வஞ்சியுந்தன்
மின்னுகின்ற கன்னம்
கொஞ்சுவென
கெஞ்சுதடி என்னை ..

மஞ்சம் கொள்ள
தூண்டுதடி ஆவல்
தஞ்சம் கொள்ள
தந்துவிடு உன்னை ..

பஞ்சமின்றி
பால் பொழிய வாழ்வு
பூஞ்சிறகுன்
கை கோர்க்க வேண்டும் ..

நெஞ்சிலெங்கும்
நீயிருக்க நிழலாய்
மிஞ்சியொரு
பெண் எதற்கு வேண்டும் ...

  அஷ்பா அஷ்ரப் அலி  

உன்னை நினைத்து ...


வெள்ளையுள்ளம் உள்ளதோ !!


திங்கள், டிசம்பர் 09, 2013

பெண்மை பூத்திட வேண்டும் ..

ஆணவம் கொண்டு ஆளும்
 ஆண்களை அடக்கியே வைக்க
பெண்களின் கூட்டம் இங்கு
 மென்மையாய் பூத்திட வேண்டும்

தடைகளாய் கற்கள் இட்டு
 இடைஞ்சல்கள் காட்டு வோரை
படையென திரண்டு பெண்கள்
 புடைசெய புறப்பட வேண்டும்

வேலியாய் இருக்கும் ஆண்கள்
 பாலியல் தொல்லைகள் புரிந்தால்
நாழிகை கூட இன்றி
 நசுக்கியே கொன்றிட வேண்டும்

ஊழ்த்துணை ஆகும் பெண்கள்
 வாழ்வினில் வசந்தம்  கண்டு
தாழ்வினை தூரமே வைத்து
 தரத்தினில் சிறந்திட வேண்டும்

வாழ்வினை கலங்கம் பண்ணும்
 கால்களில் விலங்குகள் இட்டு
ஆழ்வியாய்  குடும்பம் காக்கும்
 நாளினி எங்கும் வேண்டும் ..

    அஷ்பா அஷ்ரப் அலி

  

மச்சான் வரும் நேரமெப்போ ..


( மும் ) தாஜ்மகால் !!