வியாழன், ஜூன் 02, 2016

காதலியே !

மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா


இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா


இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா - உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா ?

காவடிச் சிந்து

ஊமையராய்  வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது  சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம்  - ஏழ்மைக் - கோலம்

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரினைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் 

ஒன்றிணைவோம் !

தானத்தைத் தரையெங்கும் பயிரிட்டுத் - தினம்
  தளிர்க்கின்ற ஈனத்தைக் களை  யெடுப்போம்
வானத்தை  வரச்சொல்லி  மண்ணைக்காக்க - எங்கும்
  வளர்கின்ற  மரங்கட்கு  காவல்  நிற்போம்
கானகத்தைக் கையோடு இணைத்தபடி  - வரும்
  கார்மேகக் கூட்டத்தை மகிழச் செய்வோம்
ஊனத்தில் வீழ்ந்தோரை விழிக்கச்செய்ய - ஒன்றி
  ஊரூராய்  சென்றேனும் விளக்கம் சொல்வோம் !


பொன்னிறைந்த பூமியிலே கண்ணுறங்கும் - நல்
  பொன்வளத்தைப் பொக்கிசத்தைத் தேடிக் காப்போம்
வன்மமென வாய்கிழியக் கத்துங்கூட்டம்  - அவர்
  மென்மனதாய் ஆகும்வரை பொறுமை காப்போம்
என்னிருகண்  மணியிந்த  நாடுஎன்று - இங்கு
  எல்லோரும் வாய்விட்டுச் சொல்லச் செய்வோம்
தென்னையுடன் தேயிலையும் விளையும்பூமி - நாம்
  தொன்றுதொட்டு வாழ்வதென உறக்கச் சொல்வோம் !

புதன், ஜூன் 01, 2016

இன்னிசை வெண்பா !


மையிருட்டி  லும்உன்றன்  மாயவிழி  பேசுவதைக்
கையடங்கி நீகிடக்கக் காண்பேனே - மெய்யுருகி
ஐயமின்றி என்நெஞ்சில் ஆள்கையிலும்  நானறிவேன்
தையளுன்றன் கண்ணின்சா  டை !

வளையற் சிந்து

கல்வியதைக்  கற்றிடுவாய்
கசடறவே  நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால்  சூழும் - நல்ல
காலமுன்னில்  கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !


கல்வியுனக் களித்தவரைக்
காலமெல்லாம் போற்று - அவர்
காலடியில்  ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த  கூற்று !

சிந்துப் பாடல் ( இலாவணி )


நெம்பதுபோல் நாள்முழுதும்
நேரடியா யுன்னினைவே
நெஞ்சினிலே குத்துதடிப்
பெண்ணே ! பெண்ணே !
செம்பவள  வாய்திறந்து
சேதியொன்னு சொல்லுவந்து
சேர்ந்திருப்போ மிக்கணமே
கண்ணே ! கண்ணே !

கண்குளிரக் காட்சிகளே
கண்ணேவுன் கண்களிலே
காணநிதம் கண்ணெதிரே
வாடீ ! வாடீ !
பெண்ணழகுப் பூத்திருக்கும்
பொய்கையடி உன்னழகில்
பேரின்பம் கொள்ளவுனைத்
தாடீ ! தாடீ !


என்னிருகண்  ணின்மணிபோல்
என்றுமுனைக் காத்திடுவேன்
ஏறெடுத்துப்  பாரடிநீ
என்னை ! என்னை !
அன்னமதைப் போல்நடந்து
ஆடிவந்தால் வாசலுக்கு
ஆவலுடன் ஏந்திடுவேன்
உன்னை ! உன்னை !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !

கொட்டுகின்ற வெய்யிலிலே கொப்புளங்கள் ஏராளம்
சொட்டு மழையில்லாத் தொல்லையிது - வெட்டவெளிப்
போட்டல்போ  லில்லம் ; புழுக்கமாம் பாய்விரிக்க
எட்டாத் தூரத்தில் இவள் !

சதிமறந்து ....

காலையிளங் கதிரொளியில்
குளித்திருக்கும் புல்லும் - அந்த
கருக்களிலும் கண்திறக்கும்
கதிர்நிறைந்த நெல்லும்

வாலையிளங் குமரிகளாய்
வயல்பரப்பில் எங்கும் - வடி
வழகுகாட்டி நெல்மணிகள்
வனப்பெடுத்துப் பொங்கும்

சோலைக்கிளிக்  கூட்டங்களோ
சுதிதொடுத்துப் பாடும் - அந்த
சுகத்தினிலே நெல்மணிகள்
சதிமறந்து  ஆடும் !

வான் மேகத்திலே !


வான்மேகக்  கூட்டத்தில்
  வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
  குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
  கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
  முகம்மூட வேண்டும் - இந்த
விண்பூக்கள் ஒவ்வொன்றும்
  உனைப்பார்க்க  வேண்டும் - இங்கே
மண்வாழும்  மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

உன்னைத்தான் !

நேசமிலாமல் இருந்திடலாம்
  நெருக்கடி யின்றியும் இருந்திடலாம்
வேசமிட் டெவனும் இருந்துவிட்டால்
  வெறுத்தே உலகம் உமிழ்ந்துவிடும்

அணிகல னின்றி இருந்திடலாம்
  அவதி யிலாமலும் இருந்திடலாம்
துணிவில் லாமல் இருந்துவிட்டால்
  துன்பம் உன்னைத் துரத்திவரும்

கலகம் தவிர்த்தும் இருந்திடலாம்
  களவில் லாமலும்  இருந்திடலாம்
கலக்கம் கொண்டே இருந்துவிட்டால்
  காலம் உன்னைக் கழித்துவிடும்

அலைச்ச லிலாமல் இருந்திடலாம்
  அலுப்பில் லாமலும்  இருந்திடலாம்
உழைப்பில் லாமல்  இருந்துவிட்டால்
  உலகம் உன்னைக் கேலிசெயும் !

ஞாயிறு, மே 22, 2016

துயரத்திலே ..


ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
காதில் வந்து  சொல்லிடுவேன்

ஊற்றாக  நானிருக்க - ஒளி
விளக்காக நீ யிருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
இருந்தால்தான்  நமக்கு என்ன


தேற்றாத இதயங்களே  - தினம்
தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
வாய்மொழியே பலம் எனக்கு !

ஒயிற் கும்மி !


கட்டுக்க டங்காத காதலி னாலிளங்
கன்னியர் போக்கினைப் பாருங்க  டி
  கனவேயிது  கறையேதரு ( ம் )
   நிலையாதது  தினமேயினி
கட்டுடன் வாழ்ந்திங்கு மாளுங்க  டி  !

பலவிகற்ப இன்னிசை வெண்பா !

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே  -  நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டினைப் போல் !

ஹைக்கூ

ஊற்றெடுத்தது
உனக்கும் எனக்கும்
கசிந்தது  ஊருக்குள் !

எண்சீர் விருத்தம்

விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச்  செய்ய
  விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டுங்  காலைக்
  கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
  மாண்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா  இயற்கைஎழில் இருந்தும்  மென்ன
  எத்திசைக்கும் திங்களொளி  தானே  வேண்டும் !


ஒளியளித்த  களைப்பினிலே கதிரோன் மெல்ல
  ஒலிகடலில் கால்நனைத்து  நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள்  வானில்
  காரிருளைக்  கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
  கீச்சிட்டே தானடையும் தத்தம்  கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
  குமரியவள் முகம்பார்த்தே மேகம்  ஓடும் !


   காய் - காய் - மா - தேமா 

திங்கள், மே 16, 2016

நொண்டிச் சிந்து !

பட்டணம்  போகாத டி - அங்கு
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க லிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் -  அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண்  டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கும்மிச் சிந்து !

செக்கச்சி வந்தவள் செங்கனி வாயிதழ்
செந்தளிர்ப் போடுதான் வந்துநின் றாள்
வெக்கத்தி லென்முன்னே வேல்விழி யாலவள்
வெட்டியே ஏதேதோ சொல்லிநின் றாள்

பக்கத்தில் நின்றவள் பார்வையின் வீச்சினில்
பாதிவு யிர்கையில் வந்தது போல்
சொக்கினே னென்னிலே ! சுந்தர முள்ளதா
சொல்லுங்கள் தோழரே உள்ளது போல் !

துளிப் பா !

நாடெங்கும்  மின்சார வெட்டு
நள்ளிரவில் நடமாடும்
நுளம்புகளோ நமைத் தொட்டு !

வீடெங்கும் எண்ணையிட்ட தட்டு - அதில்
விளையாட நுளம்புகளோ
விருப்பமுறும் மதி கெட்டு !

இயலுமெனில் கொல்லு !

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை !

ஆவலினால்   காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
ஆவதுண்மைப் பித்து  !

பூவிழியால் இழுத்துவைத்துப்
பிழிந்ததெல்லாம் போதும் -  உன்
பூவிதழால்  புன்னகைத்துப்
பிடித்திருந்தால் சொல்லு !

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு !

செவ்வாய், மே 10, 2016

துளிப்பா !


ஏறி
இறங்கி விட்டேன்
எல்லா வரிகளிலும்
என்னை
எந்த வரியில் வைத்தாய்
உன் கவிதையில் !

கும்மிச் சிந்து \

நெஞ்சுக்கு ளாயிரம் ஆசைக ளோடுது
நேரிழை யேயுன்றன் எண்ணத்தி லே
கெஞ்சுகி றேனுனைக் கேளடி கொஞ்சம்நீ
கொஞ்சிம கிழ்ந்திட லாமிங்கு வா !

நெஞ்சுக னக்கையில் நித்தமு முன்முகம்
நேசத்தி லென்முன்னே நிற்குத டி
அஞ்சுவ தெல்லாமே ஆவிபி ரிந்திடும்
ஆசைக ளாதிக்கஞ் செய்கையி லே !

இரு விகற்ப நேரிசை வெண்பா

பாட்டெழுத  வந்தாலே பைங்கிளியே உன்னினைவின்
தேட்டத்தில் நிற்குதடி என்பேனா - கூட்டத்தில்
பாடநான் சென்றாலும் பாடாது  தேடுகிறேன்
வாடவிடா தென்னருகே வா !

கும்மிச் சிந்து

பத்துக்குப் பத்தெனப் பாதிநி லத்தினைப்
பாவிக்கு ழந்தைகள்  பங்குவைக் க
சொத்துக்கள் சேர்த்திடப்  பட்டயென் பாட்டினைச்
சுத்தமாய்க் கண்டவ ராருமில் லை !


நித்தமு மிங்குநான் நித்திரை யின்றியே
நேர்த்தியில் சேர்த்தவை தானித லாம்
மெத்தவும் மேனியில் முத்திய நோயினால்
எத்தனைக் காலம்நா னிங்கிருப் பேன் !

வெள்ளி, மே 06, 2016

ஆசிரிய விருத்தம்

நண்டுகள்  நடந்தே சென்ற
  நடையினை மணலே  சொல்ல
தென்படு மிடங்க ளெல்லாந்
  தென்றலுந் தவழ  மெல்ல
கண்ணெதிர் கனவில் மூழ்கிக்
  காதலர்  தழுவல் கிள்ள
வெண்மணல் தனிமை என்னுள்
  வெறுமையில் நினைவில்  நீயே  !




   விளம் - மா - தேமா 
   விளம் - மா - தேமா 

ஆசிரிய விருத்தம்

வருமிடர் வாசல் வந்து
  வகையெனக் கிடந்திட் டாலும்
வரும்படி எதுவும் மின்றி
  வாழ்வினில் நொந்திட் டாலும்
பருவமென் உடலைத் தீண்டி
  பாலுணர் வெழுந்திட் டாலும்
அருவெறுப்  பெதிலும் மென்றும்
  அளைந்திட மாட்டேன்  தாயே !


  
      விளம் - மா - தேமா 
      விளம் - மா - தேமா

ஆசிரியத் தாழிசை


வன்புணர் வாளரே வழியினி லெங்கும்
என்மக ளுனைநான் எண்ணியே கவலை
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே !

குழவிக ளாயினுங் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே

அயலவர் நெஞ்சிலு மண்டி விடாதே
துயர்தரத் தயங்கார் தூண்டிடக் காமம்
அயர்ந்து விடாதே அல்லல்  எதிரிலே !

ஆசிரியத் தாழிசை !

இருப்போ ரெல்லாம் இல்லா தவர்மேல்
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே !

கவளம் கேட்டே கையை  நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுதல் ஆற்றுதல் நன்றே !

கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே !

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

நொண்டிச் சிந்து


அந்தியில்  கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும்  அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம்  போய்  - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய்  !

வெண்பா

கண்டு களிப்பதற்கு  கண்ணேவுன்  காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ ( டு )  என்னை  இருத்து !

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


        விளம் - மா - விளம் - மா - விளம் - காய்


கலையெழிற் பெண்ணின் கண்களைக்  காணக்
கற்பனை சிறகடிக்கும்
வளைக்கரந் தொட்டு  வார்த்தைகள் பேச
வாஞ்சையில் வாய்துடிக்கும்
அலையெனப் பொங்கும் ஆவலி லிதயம்
அடிக்கடி துடிதுடிக்கும்
நிலையினை அறிந்து நிம்மதி யற்று
நினைவுகள் சோர்ந்திடுமே !

அறுசீர் விருத்தம் !

கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு  வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரையினி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகு இறைவன் ஆற்றலை இங்கு
அறிந்திட  ஆளிலையே !

சனி, ஏப்ரல் 16, 2016

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் - காய் - காய் - காய் - மா - தேமா 



விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
   விளைக்குந் துன்பம்
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
   தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
   தீயாய் என்றன்
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
   இறைவா  இங்கே !

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    காய் - காய் - காய் - காய் 
     மா - தேமா 



கருவறுக்கு மெண்ணமுளோர் காழ்ப்புணர்வு  கொண்டவரே
   கணிசம் மிங்கே
பெருகிவரும் பேதமையால் பேரிடியாய்த் தொடர்கிறதே
   பொல்லாங்  கிங்கே
ஒருவயிற்றுப் பிள்ளைகளும் அண்டையயல் வாழ்பவரும்
   ஒன்று பட்டால்
உருக்குலைந்த ஒற்றுமையை காத்திடலாம் ஒருவாறாய்
   உலகி லின்றே !

எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

         விளம் - மா -  விளம் - மா 
          விளம் - விளம் - மா 


தன்னிக ரற்றத் தமிழ்மொழி  தன்னில்
   தாகமென் றுரைப்பவ  ரிங்கே
அன்னிய மொழியை அவரவர்க் குள்ளே
   அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
   இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
   என்றுமே எண்ணிடச் சிணமே !

திங்கள், ஏப்ரல் 11, 2016

எழுசீர் விருத்தம்


நெருப்பா யெரியும் நெஞ்சில் கிடந்து
நேசங் காட்டுங் கிளியே
விருப்பம் முன்னில் விரைந்தே சொல்ல
வீட்டா ரென்னை எதிர்க்க
தருக்கஞ் செய்தா லடியும் உதையும்
தாங்கா துடலென் னன்பே
பொருத்தம் மின்றி முடித்தே வைத்தார்
பொல்லா தவரென் அப்பா !


மா - மா - மா - மா
மா - மா - மா 

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் !

சொற்புலமை  யில்லாமல் சொற்ப காலம்
சொந்தமொழி நடையினிலே கதைகள் போலப்
பற்பலவாய்க் கவிதைகளைப் பாடித் தேய்ந்து
பைந்தமிழின் சோலையிலே புகுந்தேன் பின்னே
கற்றவராம் பாவலரின் கவிதைத் தொண்டு
கைகொடுத்து உதவுதென்னில் கைமுறை யாலே
நற்றமிழின் நடையழகை நேர்த்தி யோடே
நடந்தபடிக் கற்கின்றேன் நானு மங்கே !


காய் -காய் - மா - தேமா 

சிந்துப்பா - ஆனந்தக் களிப்பு

தெம்மாங்குப் பாட்டொன்று பாட - கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை

வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் 

சிந்துப்பா - ஆனந்தக் களிப்பு

தூளியி லென்னைநீ போட்டு - உன்
துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு
நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன்
நோவினைக் கண்டுத விக்கிறேன் வெந்து

ஆகாத வார்த்தையு மில்லை - அம்மா
ஆராரோ பாடிட ஆனந்த மில்லை
நோகாத வாறென்னைப் போட்டு - நொடி

ஒன்றேனும் பாடுநீ நல்லொரு பாட்டு 

ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

கட்டளைக் கலித்துறை

சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றி
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே !

காப்பியக் கலித்துறை

தேடு மெதையும் தருவாளெனச் சொல்ல மாட்டேன்
நாடு மெதுவும் நலமேயெனக் கூற மாட்டேன்
வீடு வளவும் விலைக்கோவெனக் கேட்க வேண்டாம்
பாடு படவே பிறந்தானெனச் சொல்லு வீரே !

காப்பியக் கலித்துறை

தன்னந் தனியே தவித்தேமனத்  துள்நி னைக்க
அன்னை மொழியால்
அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே
கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே
இதமாய்வரும் பாட லெல்லாம் !

 - தேமா - புளிமா - புளிமாங்கனி - தேம - தேமா -

சனி, ஏப்ரல் 09, 2016

சிணத்தோடு நான் !


விழுதுகள் போலுள உறவுக லெல்லாம்
  வீணெனச் சிதறிக் கிடக்கை யிலே
அழுதவன் பாதி தொழுதவன் மீதி
  அமைதி யிலாமலே வாழுகி றான்  !

கழுகுகள் போலக் காமுக ரிங்கே
  கால்களுக் கடியில் கிடக்கை யிலே
மெழுகுகள் போல மழலைக ளுயிர்கள்
  அழுகைக ளூடே கரையு திங்கே !

இழுபறி யாகும் இழிநிலை ஏனோ
  இகத்தினில் கிடந்தது சிரிக்கை யிலே
வலுவினி லுள்ளோர் வாய்களை மூடி
  வாழ்வதைக் காண  வருஞ் சிணமே !

கலித்தாழிசை

நூலாடுஞ் சேலையிலே நோகாதி ருக்கவெனக்
 காலாட்டி நாங்கிடந்துக் கண்ணாற உறங்கிவிடத்
தாலாட்டுப் பாடுகிறத் தாயேவுன் தாழ்குரலே
 மேலாக வந்தெனது மென்காதில் இனிக்கிறதே
மெய்நோகக் கிடக்கின்றாய் மென்மேலு மினிக்கிறதே !

தொட்டா லாருமெனைத் தோல்நோகு மெனவறிந்து
 கட்டாந் தரையினிலே கால்நோகக் கிடந்தபடிப்
பட்டா லெவர்கண்ணும் பட்டுவிடா மற்பாட
 இட்டமுடன் தொட்டிலிலே இனித்திடுமே உன்குரலை
இனியெங்கு கேற்பேனோ நினைத்தாலே இனிக்கிறதே !

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

கலித்தாழிசை


காத்திருந்துக் காத்திருந்துக் கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன்  னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்குக் காதலெனப் பூவிதழால் புன்னகைப்பாய் !

கலித்தாழிசை


நேற்றுவரை நீயிருந்த நேர்ச்சியினை நானிழந்து
காற்றடித்துப் போனதுபோல் கலங்குகிறே னென்னுயிரே
ஊற்றெடுத்து வருந்துயரோ ஊருசனம் வம்பளக்கத்
தேற்றவரு வாரின்றித் தெம்பிழந்து நிற்பவளை
ஏற்றமுடன் ஏந்திவிடு ஏக்கமுற நிற்பவளை !

கலிவிருத்தம்

இயன்ற வாரெலாம் ஈகையே மேலெனத்
துயரி லாழ்ந்தவர் துன்பமே போக்குதல்
பயக்கும் நன்மைகள் பற்பல தோழரே
துயர்து டைப்பதைத் தொண்டெனக் கொள்கவே !

   -  புளிமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் -

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

சிந்துப் பா ( நொண்டிச் சிந்து )

பட்டணம் போகாதே நீ  - அங்கு
  பட்டுத்தெ றிக்குது வெய்யில டி
கட்டணங்  கேட்பாரங் கே  - நாம்
  காலாறக்  குந்துங்க  ளிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான்  -  அங்கு
  ஆனந்தம் ஆங்காங்கு உண்மையும் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
  நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால்

பட்டதைச் சொல்லிவிட்  டேன்  - பட்ட
  பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
  எட்டுநீ  போயங்கு  பாருபுள் ளே !

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா !

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே -  உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !

குறும்பா !

கன்னத்திலே குத்துதென்றாள்  மீசை
கனகனத்து வந்ததுபார்  ஓசை

   சீண்டிவிட்டு அவளை
   தீண்டிவிட்ட  கவலை

பின்னிரவே மழித்தேனென்  மீசை  !

குறும்பா !

மடித்துவைத்த துணிமணிகள் கூட்டி
படித்துறைக்குக் குளிக்கவந்தாள் பாட்டி
  
   எடுத்துவைத்த புடைவையொன்றில்
   படுத்திருக்கப் புடையனொன்று

படித்துறைக்குள் பாய்ந்தாள்மூ தாட்டி !

புதுக் கவிதை !


அடுப்புப் புகையில்
அப்பச் சட்டியுடன்
தினமும் குளிக்கும் அம்மா

பக்க வாதத்தால்
படுத்த படுக்கையில்
பரிதாபத்தோடு கிடக்கும் அப்பா

பருவம் வந்தும்
பருவத்துக் கனவுகளோடு
துணிக்கடையில்
வேலை செய்யும்
கல்யாணம் ஆகாத  அக்கா

கிழிந்த சட்டையுடன்
ஓட்டை ' டியூப்களுக்கு '
பஞ்சர் போடுகிறான்
சைக்கிள் கடையில்  தம்பி

எல்லாம் தெரிந்தும்
ஒன்றுமே தெரியாதவளாய்
நேற்று கண்ட அவனுடன்
வீட்டைவிட்டு ஓடிப்போன  நான்  !

தரவு கொச்சகக் கலிப்பா !

வருவாய்நீ யெனநாளும் வழிமீது விழிவைத்துப்
பெருமூச்சு விடுகின்றேன் பெருவாழ்வு தருகவென
ஒருபோது முனைமறவேன் உயிரேவுன் தடந்தொட்டு
வரும்பாதை தனைப்பார்த்து வயதேறப் பதறுகிறேன்

ஆதலினால்

உயர்வாம் காதலை உயர்வெனப் போற்றித்
துயர்க ளிலாமல்  தூய்மையுங் கொண்டே
உயர்வாய் வாழ்வோ முலகில்
இயம்பிடு ஒருசொல் இன்மொழி கொண்டே !

புதன், மார்ச் 30, 2016

சிந்துப்பா ( ஆனந்தக் களிப்பு )

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று  !

குறுங் கவிதை


மழையில்
நனைந்து விளையாடிய
தம்பியை
உள்ளே இழுத்து
தாழிட்டாள் அம்மா
பிடித்துவிடும் சளி என்று

நனையாமலேயே
பிடித்து விட்டது சளி
அவன்
அழுத அழுகையில் !

இயல்தரவினைக் கொச்சகக் கலிப்பா !

பற்றைப் படர்ந்திருக்கப் பால்நிலவும் பாய்விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே ஓரிரவு நாமிருவர்
ஒற்றையிலே நின்றதையே ஒட்டநின்று பார்த்தவரார்
சற்றே கசிந்துவிடச் சாதிசனங் கண்திறக்க
உற்றா ரெனைக்கேட்க ஊருசன மும்சிரிக்க
சொற்கலக மாகியதே  சொல்லாத சொல்லுமெழ
முற்று மிழந்தேனே மூச்செல்லா முன்னினைவே
பற்றோ டிருப்பவளைப் பாராயோ என்னுயிரே !

ஞாயிறு, மார்ச் 27, 2016

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !


உள்ளத்தை ஈந்துனக்( கு ) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய் ! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு  காதாய்ச்சொல்

கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு  !

வெண்பா !



கண்ணாடி முன்னின்று கண்ணுக் குமைதீட்டி
வண்ணக் கிளிபோல வந்தால்நீ  - என்னுடனே
அத்தானின் தொப்பையினால் ஆகாப் பொருத்தமடி

முத்தேநீ ! போநடந்து முன் !

நட்புகள் !



வஞ்சிப்போர் கொண்டாடும் நட்பும்  உண்டு
நஞ்சாகிப் போனபல நட்பும்  உண்டு
கொஞ்சலிலே குளிர்காயும் நட்பும் உண்டு
மஞ்சம் குளித்தணைந்த நட்பும் உண்டு
வெஞ்சினத்தால் வெந்தவிழ்ந்த நட்பும் உண்டு
நெருஞ்சியெனக் குத்துகின்ற நட்பும் உண்டு
அஞ்சலித்துப் போற்றுகின்ற நட்பும் உண்டு
அஞ்சரினா லழிந்தொழிந்த நட்பும் உண்டு
சஞ்சலத்தி லுயிர்துறந்த  நட்பும் உண்டு
நெஞ்சகத்தைத் தாலாட்டும் நட்பும் உண்டு  !

வெண்பா


பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையை - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி  அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள்  !

கட்டளைக் களிப்பா !

                                       
           அரையடி : தேமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் 



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ எம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !

சனி, மார்ச் 26, 2016

புதிர் வெண்பா


காலிருக்கும் கையில்லை கண்ணில்லை வீட்டினிலே 
காலமெலாம் நின்றிருக்கும் காவலன்யார் - காலிருந்தும் 
காலிமனை யானாலுங் காலடிமண் ஒட்டாதுக் 
காலாற லில்லாக் கதவு !

செவ்வாய், மார்ச் 22, 2016

வெண்பா

அன்னைக் குதவுதற்கோ ஆளாகிப்  போனபின்னே
தன்னைத் தரப்படுத்த ஒத்திகையோ - சின்னவள்தான்
சிற்றிடையில் செம்பணைத்துச் சின்னக் கரமசைத்துப்
பற்றோடு போகுமெழில் பார்  !

குறுங் கவிதை

என்னதான் சொன்னாலும்
திரும்பிப் போவதாக இல்லை
பின்னாலேயே வருகிறது
உன் கடைசி வார்த்தை 

அறுசீர் விருத்தம் !

விருந்தென மதுவை வார்த்து
... விளித்திடும் நட்பே வேண்டாம்
மருந்தெனச் சொன்னால் கூட
... மதுவினைத் தொடவே வேண்டாம்

அருந்திட ஆற்ற  லேற்றும்
... அகன்றிடுந் துன்ப மென்பார்
அருந்தியே ஆர்ப்ப ரித்தே
... ஆறுதல் சொல்லிக் கொள்வார்

வருந்தியே கண்ணீர்  சிந்தும்
... அருந்தியோர் சொல்வ தெல்லாம்
வருத்திடும் பிணிகள் சேர்த்து
... வாழ்வதில் சாதல் மேலாம் 

சனி, மார்ச் 19, 2016

ஹைக்கூ


எத்தனைமுறை  விரட்டினாலும்
உட்கார்ந்து செல்லத் தீராத ஆசை
ஆறாத புண்ணில் ஈ !

குறும்பா !

கல்லூரி  வாசலிலே  கூட்டம்
எல்லோரின் முகத்திலுமே வாட்டம்

  வந்திருந்த பெருபேற்றில்
  நொந்தவரே பலபேராம்

கல்லாமல் அலைந்ததனால் தேட்டம் !

வெண்கலிப்பா !

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா  லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாட
பெருகுமே புகழுலகில் 
கருகொண்டக் கவிதைகளாய்
கமழவே  நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

வெள்ளி, மார்ச் 18, 2016

குறுங்கவிதை !


நீ
இல்லாத தருணங்களில்
என்னோடு
பேசிக்கொண்டிருக்கிறது
உன் கவிதைகள்
அதே மெளனத்தில்  ....

குறும்பா !

தினந்தோறும் குடிப்பவன்தான்  முத்து
சினமேறத் தினம்பிடிக்கும் பித்து


   ராத்திரியில் வருபவனை
   ராசாத்தி அவள்மனைவி


சினத்தோடு கேட்கவிழும் குத்து  !

குறும்பா !

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே அவள்மேல்தான் ஆச

  கள்ளியவள் வருவாள் பார்
  கிள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடிக் கூந்தல்மணம் வீச !

வியாழன், மார்ச் 17, 2016

வெண்பா !

தங்கு தடையின்றித் தருவளம் யாவுமே
எங்கு மிடையூறாய் ஏனிது - பங்கமாய்
வாழும் மனிதரின் வாழ்க்கையும் மாறவே
மூழுதே அதுவென மொழி 

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடு நம் 
முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட

காணும்

இரப்போரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே !

புதன், மார்ச் 16, 2016

வெண்பா


ஓவியத்துத் தேனடையில் ஓடுகின்ற தேனதனை
நாவினிக்கத் தேடுவதேன் நோவினையே - ஓவியத்தின்
பூக்கள் மனக்குமெனப் பூரிக்குங் காதலதன்
தாக்கத்தை நெஞ்சில் தவிர்

வெண்பா

பச்சையிளம் பாலகியுன் பால்முகத்தி லட்சணமாய்
அச்சமிலாப் புன்னகைதா னார்ப்பரிக்க - நிச்சயமாய்
ஏழ்மை பொருட்டல்ல என்றோதும் பாங்கதனில்
வாழ்வாய்நீ வாழ்வாங்கு வாழ்

கலிவிருத்தம்

நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு
..நினைவிழந்து நிற்பதுமேன் அல்லிப் பாவாய்
நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை
.. நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி


ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்
.. உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்
பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே
.. படபடத்து நிற்பதுமேன் பகிர்வா யல்லி



மாலைவரும் மதியாளின் மயக்கும் ஒளியில்
.. மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன
ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்
.. ஒர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி

செவ்வாய், மார்ச் 15, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா


கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியே நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா  ளேன்

இரு விகற்ப நேரிசை வெண்பா

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறார
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் -
தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக்
குழைப்பதொன்றே குறி 

இரு விகற்ப நேரிசை வெண்பா

பார்வை யொளிர்கையிலே பாராது  மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம்
சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது  தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்

 

திங்கள், மார்ச் 14, 2016

மனித மனம் ?

ஆகாயம் பூமியெங்கும் காற்று  அலையுது
... அன்றிலெலாம்  பனைமடலில் கூடு கட்டுது
கார்கால மேகமெலாம் கலைந்து ஆடுது
... கசிந்துவரும் மழைக்குஅது கான மிசைக்குது
ஊர்கோல மாககிளி உயரப் பறக்குது
... ஒன்றுக்கொன் றுறவாடிப் பாடி மகிழுது
ஊதாரி மனிதமனம் உறங்கிக் கிடக்குது
... ஒற்றையிலே நின்றுவாழ தருணம் பார்க்குது !


பூக்களெலாம் புன்முறுவல் பூத்து நிற்குது
...  பொல்லாத மனிதமுகம் பொரிந்து கருகுது
ஏக்கங்கள் குடிசைகளில் எழுந்து நடக்குது
... ஏளனங்கள் கைபிடித்து நடந்து செல்லுது
தூக்கத்தில் ஆறறிவோ துவண்டு கிடக்குது
... துரத்திவரும் துன்பங்களோ தலையி லேறுது
மூர்க்கத்தில் வருந்துன்பம் பார்க்கத் தவறுது
... முடிவில்லா சிக்கலிலே பகைமை ஓங்குது
  !

ஒற்றிலா வெண்பா

நாளு முனையேநா நாடாத நாளிலையே
கேளு கிளியேநீ  கேடெதுவோ - மூளுதடி
வாழநீ  வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்க்கேதான் பொற்காலம் - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
இல்லா தவர்க்கிழிவே இங்கு 

ஞாயிறு, மார்ச் 13, 2016

வெண்பா

கன்னி யிளமனதில்  காலூன்றி விட்டதனால்
பின்னி யெடுக்கின்றார் பெற்றவரும் - என்னுயிரே
துள்ளித் திரிகின்றே னுன்னினைவால் என்னைநீ
அள்ளியே சென்றிடுவாய் ஆங்கு 

வஞ்சித் தாழிசை


சுயநலம் முள்ளவர்
மயங்கிடப் பேசியே
இயங்குவார் தேர்தலில்
வியப்பிதே எங்கிலும்

உயர்நிலை கண்டவர்
துயர்தர அஞ்சிடார்
பயனிலா ஆட்சியே
பயக்குதே எங்கிலும்

நடைமுறை வாழ்விலே
கடைநிலை நம்மையே
குடைகிறா ரின்னமும்
இடைஞ்சலே எங்கிலும் 

வெண்பா .. ஆசானுக்கு !

கற்றநற் கல்வியினைக்  கற்றதுவே புண்ணியமாய்
மற்றோருக்கு மூட்டி மகிழ்கின்றார்  - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்  

வஞ்சி விருத்தம்

வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை 

வெண்பா

ஆற்றாத் துயரத்தி லாழ்ந்தோரைக் காணுங்கால்
தேற்றா திருக்காதே தொல்லுலகில் - சீற்றமாய்
மாற்ற முனக்கீந்தால் மாயவனோ ! நெஞ்சாரத்
தேற்றவரு வாரில்லைத் தேர் 


சனி, மார்ச் 12, 2016

பொன்மொழி வெண்பா !

சுட்டுவிர லால்சுட்டச் சுட்டுமுனை  மற்றவிரல்
தொட்டுநீ வாழ்வதையே தொட்டுணர்த்து - இட்டமுடன்
மற்றவரில் வேண்டுமுன்னில் அற்றதைநீ நாடாதே
கற்றதுவோ கைம்மண் ணளவு !

வெண்பா

கண்களில்  பூத்தது  காதலோ  காமமோ
என்விழி  நோக்கினா ளேனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க  நெருங்கினே னன்னவள்
அஞ்சியே  நின்ற  அழகு !

மருட்பா ( செவியறிவுறுஉ )

துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது  தொய்விலா
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர்  இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத்
தாழுமவர்  வாழ்வொளிரத் தாழ்திறந்  தாலிங்கு
நிலையிலா  வாழ்விலே நிலையெனத்
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

புதிர் வெண்பா

வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல்  கண்டால் கலங்குவோன்யார்  -  நன்றெனவே
கன்ன  மிடாதபடிக்  காப்பவனா  மில்லத்தைக்
கன்னகங்  கண்டதிரும்  பூட்டு !

வெள்ளி, மார்ச் 11, 2016

வெண்பா !

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே -  என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ  ரார்  !

சமநிலை மருட்பா ( கைக்கிளை )


                           சமநிலை மருட்பா
                            ( கைக்கிளை )

கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய்  வந்திடேல்
மாழ்குவே னோவென  மனத்திலே கிலியே !

எண்சீர் விருத்தம் !

                       காய் -காய் -மா -தேமா


மாளையிளங்  கதிரொளியில்  கண்டே னந்த
  மங்கைமுகம் மலரத்தான் கண்ணில் லென்றன்
சோலைநிறைப்  பூக்களென மலர்ந்தே நெஞ்சில்
  சொப்பனத்தில் கூடஅவள்  சிரிப்பா ளென்னில்
மாளைவரும் வேளைதனில் மயக்கங்  கண்ணில்
  மங்கைமுகம் தான்காணத் துடிக்கும் நெஞ்சம்
பாலையவள் பார்த்திடவே பதறும் மெண்ணம்
  பாழ்மனதில் படுத்திருப்பாள் பாரா தென்னை


இனம்காணா துன்பத்தீ இதயந் தொட்டே
  இக்கணமும் எரிகிறதே எரிந்தே வெந்த
மனங்கட்குள் மொட்டவிழ்ந்த காதல் மாயை
  மனங்கொத்திச் செல்வதுவோ  ஒற்றைக் காதல்
அனல்சேர்ந்து விளையாடும் அன்பில் சிலரோ
  அலைமோதிச் சாகின்றா ரதுவே உண்மை
தினவெடுத்த நெஞ்சத்தின் கண்கள் கண்டே
  தினமென்னைக் கொல்லுகிறாள் தீயாய் வந்து 

நடுக்கம் எனக்குள் ...

கடுப்போ டிருக்கும் அப்பா  -  தேளின்
கொடுக்கா  யிருக்கும்  அம்மா
மிடுக்கில்  சிரிக்கும் அக்கா - வேலித்
தடுப்பா யிருக்கும் அண்ணா


தொடுத்த  காதல்  எனக்குள் -  ஓங்கி
ஒடுக்கம் காணும் நிலையில்
ஒடுங்கும் மென்றே  எண்ணி -  ஒரு
நடுக்கம் மெனக்குள்  தினமும் 

இரு விகற்ப நேரிசை வெண்பா !

 பள்ளி  கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை
அள்ளிப்  பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள்
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன்
சாந்தமுகம் பேசுவதே சான்று 

எல்லோர்க்கும் ஆசை !

கண்கெட்டுக் கிடக்குதடா உலகம்  - காணும்
   களமெல்லாம் நடக்குதடா  கலகம்
கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
   கோளாறு இருக்கும்வரை உறுதி
உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
   வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்
எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
   எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு


கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
   கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்
புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
   புழுதிவாரிப் போட்டோரும் உண்டு
ஆகாது என்றாலும் தேகம் - தினம்
   போதாது என்றலறும் போகம்
வேகாது வாழ்வோர்க்கு மாசை - வெந்து
   வேக்காடு ஆனோர்க்கு மாசை
    

புதன், மார்ச் 09, 2016

இன்னிசை வெண்பா

நன்றேசெய் நானிலத்தில் நல்வாழ்வு வாழ்வதெனில்
அன்றே லமர்ந்துநீ ஆங்குறங்கு ! தன்னார்வத்
தொண்டாற்றுந் தொண்டர்க்குத் தொல்லையினைத் தாராமல்
ஒன்னா திருந்தே உழல் !
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -

புதிர் வெண்பா


கையிருக்கும் காலில்லை கைப்பிடி யில்லாமல்
பையோ டிருப்பவனார் பைங்கிளியே - மெய்யுடையார்
மேலங்கி போலணியும் மேலாடை யாம்சட்டை 
மேலாத்த லோடுஉம் மேல் !
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -